நேரு குடும்பத்தைச் சேராதவருக்கு காங். தலைவர் பதவி... ப.சிதம்பரத்துக்கு கிடைக்குமா வாய்ப்பு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேரு குடும்பத்தைச் சேராத ஒருவரே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எனில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் முதுபெரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரத்துக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Recommended Video

    இந்திரா காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வரட்டும் - பிரியங்கா காந்தி

    காங்கிரஸ் கட்சியானது இந்திரா காலத்துக்குப் பின்னர் நேரு குடும்பத்தின் சொத்து என்ற முத்திரைக்குள் தள்ளப்பட்டது. நேரு காலத்தில்கூட வலிமை மிக்க தலைவர்கள் காங்கிரஸை வழிநடத்தினார்கள்.

    இந்திரா காந்தி தலையெடுத்த போதும் காமராஜர், நிஜலிங்கப்பா போன்ற ஆளுமைகள் இருந்தனர். ஆனால் இவர்களுடன் மல்லுக்கட்டி வெளியேற்றினார் இந்திரா காந்தி. எந்த காமராஜர் தம்மை பிரதமராக்கினாரோ அதே காமராஜரை எதிர்த்தவர் இந்திரா காந்தி. அதே காமராஜரை எமர்ஜென்சியில் கைது செய்ய உத்தரவிட்டவரும் இந்திராதான். இந்திரா காலத்தில் உருவான 2-ம் கட்ட தலைவர்கள் அனைவருமே குடும்ப விசுவாசிகளாக உருமாறிப் போயினர். இதனால் இந்திராவுக்குப் பின்னர் ராஜீவ் வந்த போதும் சரி அவருக்கு பின்னர் சோனியா, ராகுல் வந்த போதும் சரி அந்த குடும்பத்துக்கு விசுவாசமாக இருப்பதே காங்கிரஸ் கட்சிக்கு செய்யும் மிகப் பெரிய தொண்டாகிப் போன துயரம் நிகழ்ந்துவிட்டது.

    பரிதாப காங்.

    பரிதாப காங்.

    இதன்விளைவாகத்தான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தேசத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சியால் லோக்சபாவில் எதிர்க்கட்சியாகக் கூட முடியாமல் படுதோல்வியை எதிர்கொள்ள நேரிட்டது. எப்படி இருந்த நான்? என்கிற திரைப்பட வசனமும் சரி.. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை என்கிற பழமொழியும் காங்கிரஸுக்கு மட்டுமே சரியாகப் பொருந்துகிற சூழ்நிலையையும் உருவாக்கிவிட்டது. கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப் போல இப்போது நேரு குடும்பம் அல்லாத வலிமையான ஒருவரை தலைவராக்க நேரு குடும்பத்து வாரிசுகள் அல்லாடுகின்றனர். இதில் எத்தனை உள்நோக்கம் இருக்கிறதோ..அது அவர்களுக்குத்தான் வெளிச்சம். சரி அப்படி யார்தான் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக தகுதி படைத்தவர்கள்? என பார்ப்போம்.

    காங். தலைவராவாரா ப.சி.?

    காங். தலைவராவாரா ப.சி.?

    தமிழகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பெயர் ஏற்கனவே அடிபட்டுக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராகக் கூட முன்னிறுத்தப்படுவதற்கான தகுதியும் திறமை கொண்ட தலைவர்தான் ப. சிதம்பரம். பாஜகவை சித்தாந்த ரீதியாகவும் சர்வதேச அரசியல், பொருளாதார ரீதியாகவும் வெளுத்துக் கட்டி மிகச் சரியான நபராக இருப்பார் சிதம்பரம் என்பது மிகையல்ல. ஆனால் அகில இந்திய தலைவர் பதவிக்கு செல்லும் போது தமது வளைந்துகொடுக்காத ஆளுமையையும் கம்பீரத்தையும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக ப.சிதம்பரம் மாற்றிக் கொள்வாரா? என்கிற கேள்வியும் இயல்பாகவே எழும். அடுத்ததாக கேரளாவில் ஏ.கே. ஆண்டனி. சோனியா குடும்பத்துக்கு மிக மிக அன்னோயன்யமான விசுவாசி. உட்கட்சி விவகாரங்களை நீண்டகாலம் கையாண்ட அனுபவம் உள்ளவர்.

    மல்லிகார்ஜுன கார்கே, சிவகுமார்

    மல்லிகார்ஜுன கார்கே, சிவகுமார்

    கர்நாடகாவில் முதுபெரும் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. மற்றொருவர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ள சிவக்குமார்.. எம்.எல்.ஏக்களை பாஜக வளைக்கும் போதெல்லாம் அந்த கட்சியின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டி வெலவெலக்க வைத்தவர். இதனாலேயே பாஜகவின் கடுமையான கோபத்துக்குள்ளாகி சிறைவாசத்தையும் எதிர்கொண்டவர். இருந்தபோதும் அகில இந்திய தலைவர் பதவிக்கு பொருத்தமானவராக இருப்பாரா? என்கிற ஒரு கேள்வி தொக்கியே நிற்கிறது. ஆந்திரா, தெலுங்கானாவில் சொல்லிக் கொள்ளும்படியான தலைகள் தென்படவில்லை. யார் கண்டது? இந்த மாநிலங்களில் ஒரு நரசிம்மராவ் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதுதான் காங்கிரஸின் வரலாறு.

    என்சிபி சரத்பவார்

    என்சிபி சரத்பவார்

    மகாராஷ்டிரா மாநிலம் என்ற உடனே ஒரே ஒரு சாலப் பொருத்தமான நபராக இருப்பவர் சரத்பவார்தான். தேசியவாத காங்கிரஸை காங்கிரஸுடன் இணைத்துவிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவராகலாம் சரத்பவார். காங்கிரஸ் கட்சியை அவரால் கட்டுக்கோப்பாக கொண்டு போய்விட முடியும். எல்லாம் அவருக்கு சாதகமாக இருக்கும். ஆனால் சோனியா குடும்பத்தினரை முற்று முழுதாக ஒதுக்கி பத்தோடு பதினொன்று நிலைக்கு தள்ளிவிடுவார் சரத் பவார். இந்த அச்சத்தால் அவரிடம் கொஞ்சம் சோனியா குடும்பம் அடங்கித்தான் போகுமே தவிர நெருங்கவிட்டுவிடாது. வட இந்தியாவைப் பொறுத்தவரையில் இளம் தலைவர்களும் உண்டு; பெருந்தலைவர்களும் உண்டு.

    சத்தீஸ்கர் பாகல்

    சத்தீஸ்கர் பாகல்

    சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் நிச்சயம் ஆளுமை மிக்க தலைவர்தான்..அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அகில இந்திய தலைமைக்கு அவர் எந்த அளவுக்கு பரிசீலிக்கப்படுவார் என்கிற கேள்வி உள்ளது. அதேபோல் மூத்த தலைவர்கள் வரிசையில் கலம்நாத்தும் ஒருகாலத்தில் இருந்தார். ஆனால் மத்திய பிரதேசத்தில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்து அவர் தோல்வி மனிதராக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார். இளம் தலைவர்களில் சச்சின் பைலட்டுக்கும் கூட அந்த வாய்ப்பு இருந்தது. ஆனால் என்ன அவசரத்தனமோ கலகக் குரல் எழுப்பி அந்த வாய்ப்பை பறிகொடுத்துவிட்டார். அதேநேரத்தில் அசோக் கெலாட்டுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவராவதற்கும் வாய்ப்பு உள்ளது.

    ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

    ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

    பாஜகவை எப்படி ப. சிதம்பரம் சித்தாந்த ரீதியாக எதிர்கொள்வாரோ, டிகே சிவக்குமார் எப்படி வியூகங்களில் எதிர்கொள்வாரோ அதைவிட பன்மடங்கு பாஜகவை தெறிக்கவிடக் கூடிய அனுபவம் கொண்டவராக திகழ்கிறார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்கும் கூட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவருக்கு நல்ல சான்ஸ்தான். ஆனால் சோனியா குடும்பம் அவரை ஏற்றுக் கொள்ளுமா? என்கிற ஒரு கேள்வியையும் சிலர் முன்வைக்கின்றனர். சோனியா குடும்பத்தின் கைப்பொம்மையாக ஒருவர் காங்கிரஸ் தலைவராகப் போகிறாரா? அல்லது பாஜகவுக்கு வலிமையான பதிலடி தரப் போகிற ஒருவர் காங்கிரஸ் தலைவராவா? என்பதற்கான விடைக்காக காத்திருக்கின்றனர் கட்சி தொண்டர்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+