தன்னை விமர்சனம் செய்ய மாட்டார்கள் என நினைக்கிறார்.. நிர்மலா சீதாராமன் மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
டெல்லி: மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன்னை யாரும் விமர்சனம் செய்யமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்திற்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வரி மூன்று ரூபாய் குறைக்கப்பட்டு உடனடியாக விலை குறைப்பு நடவடிக்கை அமலுக்கு வந்திருக்கிறது.
இந்த நிலையில்தான், மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைத்து விலை ஏற்றத்தை தடுக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆயில் பாண்ட்
இதுபற்றி சமீபத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஆயில் பாண்ட் வாங்கியதில் நிறைய கடன் பாக்கி இருக்கிறது, அதை செலுத்துவதற்கு காலக்கெடு தேவைப்படுவதால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை குறைக்க முடியாது என்று தெரிவித்தார்.

அறியாமை அல்லது தப்பான தகவல்
இந்த நிலையில்தான் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவு மூலமாக இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்திற்கும், எண்ணெய் பாண்ட் ஆகியவற்றுக்கும் தொடர்பு படுத்தி நிதி துறை அமைச்சர் பேசி இருப்பது ஆச்சரியம் தருகிறது. இவரது இந்த கருத்து முற்றிலுமாக அவரது அறியாமையை காட்டுகிறது அல்லது திட்டமிட்டு தப்பான தகவல் பரப்பப்படுகிறது.

வரி விதித்து பிழிகிறார்கள்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களுக்கு நிம்மதியை தந்தது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிகப்படியான வரி மற்றும் செஸ் விதித்து மக்களை கசக்கிப் பிழிகிறது. இவ்வாறு அவர் ட்விட்டர் பதிவு வெளியிட்டிருந்த நிலையில் நேற்று சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியது. இது தொடர்பாகவும் ப.சிதம்பரம் ட்வீட் பதிவு வெளியிட்டுள்ளார்.

சிலிண்டர் விலையேற்றம்
ப.சிதம்பரம் அதில் கூறுகையில், எல்பிஜி சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 9 மாதங்களில் 265 ரூபாய் அளவுக்கு சிலிண்டர் விலை உயர்வை எட்டி இருக்கிறது. இன்னொரு பக்கம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்வையும் எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் இவர்கள் விலையை ஏற்றி கொண்டே இருக்கிறார்கள். நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அரசு மேலும் மகிழ்ச்சி அடைந்து இருக்கும்.

விமர்சனம் செய்ய முடியாது என நிர்மலா சீதாராமன் நினைக்கிறார்
10 வருடங்களுக்கு முந்தைய ஆயில் பாண்ட் விஷயத்தை இப்போதைய விலை ஏற்றத்திற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பயன்படுத்தக்கூடும். ஏனென்றால் நிதியமைச்சர், தன்னை யாரும் புரிந்து கொள்ள முடியாது அல்லது யாரும் அவரை விமர்சனம் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications