என் மனைவி மூளையில் ரத்த கசிவு..17 நாட்களாக அவஸ்தை! கண்ணீருடன் முதலமைச்சர் விஜய்க்கு முத்துக்காளை உருக்கம்
சென்னை: நடிகர் முத்துக்காளை தன்னுடைய மனைவிக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு ஹாஸ்பிடலில் இருப்பதாக கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். மேலும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கோரிக்கை வைத்து அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வருகிறது.
முத்துக்காளை சினிமாவில் சின்ன கதாபாத்திரங்களிலிருந்து தொடங்கி, முன்னணி காமெடி நட்சத்திரங்களான வடிவேலு, விவேக் ஆகியோருடன் இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். இப்போது அவர் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசர நிலை திரையுலகத்தையும் ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மனைவி மாலதி உடல்நிலை கவலைக்கிடம்
இந்த நிலையில், அவரது மனைவி மாலதிக்கு திடீரென மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. 47 வயதான அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்யப்பட்டாலும், அதன் பின்னர் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த 17 நாட்களாக சுயநினைவு இன்றி சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவருக்கு சுவாசிப்பதிலும் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் மேல் சிகிச்சை அவசியம் என்று அறிவுறுத்தியுள்ள நிலையில், குடும்பம் பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளது.
முதலமைச்சர் விஜய்யிடம் உதவி கோரிக்கை
இதனால் மனவேதனையில் உள்ள முத்துக்காளை, தமிழக முதலமைச்சரான விஜய் அவர்களிடம் உதவி கோரிக்கை வைத்துள்ளார். "17 நாட்களாக தனியாக போராடி வருகிறேன்" என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
முத்துக்காளை, விஜய்யுடன் 'யூத்', 'தமிழன்', 'மின்சார கண்ணா', 'பகவதி', 'சுறா' போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், ஒரே துறையைச் சேர்ந்த நடிகரின் இந்த துயரநிலைக்கு முதலமைச்சர் உதவி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்திலும் ரசிகர்களிடமும் அதிகரித்துள்ளது.
ஆரம்ப வாழ்க்கை
ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துக்காளை, முதலில் ஸ்டண்ட் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்தவர். ஆனால் சினிமா அவருக்கு உடனடி வாய்ப்புகளை வழங்கவில்லை. பல நாட்கள் வறுமையில் தவித்த அவர், AVM Productions நிறுவனத்தில் சின்ன வேலைகளையும் செய்தார். வாழ்க்கையின் கடினங்களை தாங்கிய அவர், பின்னர் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

நடிகராக உயர்ந்த பாதை
'காதலுக்கு மரியாதை', 'பொன்மனம்' போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்த அவர், தனது தனித்துவமான உடல் மொழி, டயலாக் டெலிவரி மற்றும் நடிப்பால் கவனிக்கப்பட ஆரம்பித்தார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து, பிஸியான காமெடி நடிகராக மாறினார்.
'சிக்கன் 65' காமெடி, 'பூசணிக்காய் உடைக்கும்' காட்சி, 'செத்து செத்து விளையாடுவோமா' போன்ற பல காமெடி காட்சிகள் அவருக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தன. குறிப்பாக, வடிவேலு மற்றும் விவேக் இணைந்து நடித்த காமெடி காட்சிகளில் முத்துக்காளையின் நடிப்பு ரசிகர்களால் மறக்க முடியாததாக உள்ளது.
கல்வியில் சாதனை
நடிகராக மட்டுமல்லாமல், வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியவர் முத்துக்காளை. ஒருகட்டத்தில் குடி பழக்கத்திற்கு அடிமையான அவர், அதிலிருந்து மீண்டு தனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டார். 50 வயதில் மூன்று பட்டப்படிப்புகளை முடித்து, "படிப்புக்கு வயது ஒரு தடையல்ல" என்பதை நிரூபித்தார். இது பலருக்கும் ஊக்கமாக அமைந்தது. அவரது குடும்ப வாழ்க்கையிலும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, தனது மகனையும் நல்ல முறையில் படிக்கச் செய்து வருகிறார்.
ரசிகர்களின் ஆதரவு
சமூக வலைதளங்களில் முத்துக்காளைக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். பலரும் அவரது மனைவி விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
பல சோதனைகளை கடந்து வந்த முத்துக்காளையின் வாழ்க்கை மீண்டும் ஒரு கடினமான கட்டத்தை சந்தித்துள்ள நிலையில், அவருக்கு உதவி கிடைக்குமா என்பது தற்போது அனைவரும் கவனித்து வரும் விஷயமாக உள்ளது.













Click it and Unblock the Notifications