"குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு ஊருக்கே மின்சாரம் இப்போ தான் போகுது!" சாடும் ப.சிதம்பரம்
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் சிதம்பரம் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாகச் சாடி உள்ளார்.
இந்தியாவில் இப்போது குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் விரைவில் முடியும் நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய வரும் ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தல் அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பிலும் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல பாஜக சார்பில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இதில் திரௌபதி முர்மு வெற்றி பெறுவது உறுதி என்றே சொல்லலாம். இதனிடையே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவின் சொந்த கிராமத்தில் மின்சார இனைப்பு வழங்கும் பணிகள் போர்க்கால வேகத்தில் நடைபெற்று வருவதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாகி.
இந்தச் செய்தியையும் பிரதமர் மோடியின் கருத்தை ஒப்பிட்டு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து சிதம்பரம் தனது ட்விட்டரில், "இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் சென்றடைந்துவிட்டது என்று பிரதமர் கூறிய அதே நாளில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் சொந்த கிராமத்துக்கு மின்சாரம் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.
மின்சாரம் இல்லாத ஒரே குக்கிராமம் இது இல்லை. இந்தியாவின் பல தொலைதூரப் பகுதிகளுக்கும் பல கிராமங்களுக்கும் பல ஆயிரம் வீடுகளுக்கும் மின்சாரம் இன்னும் சென்றடையவில்லை என்பதை ஒப்புக்கொள்வதில் வெட்கப்படத் தேவையில்லை.
கடந்த 75 ஆண்டுகளில் நாம் சாதித்தது உண்மையில் பெருமை கொள்ளத்தக்கது. ஆனால் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் அத்தியாவசிய சேவைகளை எடுத்துச் செல்ல இன்னும் கூட வேலை நடந்து கொண்டே தான் இருக்கிறது.
2004ஆம் ஆண்டிற்குள் இந்த மகத்தான சாதனைகளைப் பிரதமர் ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். மேலும் அவரது அரசு முந்தைய அரசாங்கங்களின் பணிகளைத் தொடர மட்டுமே செய்கிறது" என்று அவர் தெரிவித்தார்.