பணமதிப்பிழப்பு நடவடிக்கை தவறானது என உத்தரவு போடுங்க... அடுத்த அறிவிப்பு வராது: ப.சிதம்பரம் வாதம்
டெல்லி: மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தவறானது என மத்திய அரசு உத்தரவிட்டால்தான் அடுத்த அறிவிப்பு வராது என உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் வாதிட்டார்.
கடந்த 2016-ம் ஆண்டு திடீரென பிரதமர் மோடி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என ஒரு அறிவிப்பு வெளியிட்டார். இதனால் ஒட்டுமொத்த நாடும் பல மாதங்களாக பெரும் குழப்பத்தில் சிக்கின.
தங்களிடம் இருந்த ரூ500, ரூ1,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கு, ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை எடுப்பதற்கு பொதுமக்கள் பட்ட துயரம் கறுப்பு பக்கங்கள்.. வங்கி வாசல்களிலேயே செத்து மடிந்தவர்கள் ஏராளம்.. வங்கி பணப் பரிமாற்றங்களுக்கு அன்று விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று வரை தொடரவே செய்கின்றன.

58 வழக்குகள் மீது விசாரணை
மத்திய பாஜக அரசின் இந்த விபரீத நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 58 வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகள் அனைத்தும் அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டன. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இவ்வழக்கை விசாரிக்கும் என முந்தைய தலைமை நீதிபதி தாகுர் உத்தரவிட்டிருந்தார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இவ்வழக்கை தற்போது நீதிபதிகள் நசீர், கவாய், போபண்ணா, ராமசுப்பிரமணியன் மற்றும் நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் வியாழக்கிழமையன்று காரசரா விவாதங்கள் நடந்தன. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜராகினார்.

ப.சிதம்பரம் வாதம்
உச்சநீதிமன்றத்தில் ஆஜரான ப.சிதம்பரம் தமது வாதத்தில் குறிப்பிட்டதாவது: நாட்டின் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிதான் திரும்பப் பெற முடியும். ரிசர்வ் வங்கிக்குதான் இந்த அதிகாரம் இருக்கிறது. இப்படியான ஒரு சட்டம்தான் நாட்டில் இருக்கிறது. ஆனால் இதனை கேலிக்கூத்தாக்கிவிட்டது மத்திய பாஜக அரசு. மத்திய அரசே, தன்னிச்சையாக ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது சரியானது அல்ல.

தடை விதிக்க வேண்டும்
ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய பாஜக அரசு அறிவித்தது தவறான முடிவு. இத்தகைய முடிவுக்கு உச்சநீதிமன்றம் நிச்சயம் தடை விதித்தாக வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நாட்டின் அனைத்து குடிமக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய முடிவுகளை அறிவிக்கும் முன் ஏற்படும் விளைவுகளை அலசி ஆராய வேண்டும். ஆனால் மத்திய பாஜக அரசோ அப்படியான ஒரு ஆய்வையும் மேற்கொள்ளவும் இல்லை.

பின்விளைவுகளை சிந்திக்கவே இல்லை
மத்திய பாஜக அரசால் மொத்தம் ரூ2300 கோடி ரொக்கம் மதிப்பிழப்பு செய்யப்பட்டது என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவ்வளவு மதிப்பிலான நோட்டுகளை நாம் அச்சடிக்க முடியுமா? அரசு அச்சகத்தால் ஒரு மாதத்துக்கே ரூ300 கோடி ரொக்கம்தான் அச்சடிக்க முடியும் என்கிற நிலைமை உள்ளது. அதேபோல் ரூபாய் நோட்டுகள் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் 2 கோடி ஏடிஎம் இயந்திரங்களையும் மாற்ற வேண்டும். இதை எல்லாம் மத்திய பாஜக அரசு கருத்தில் கொள்ளவே இல்லை. ஆகையால் மத்திய அரசின் முடிவுக்கு தடை விதித்தால்தான் இன்னொரு ரூபாய் மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாவதைத் தடுக்க முடியும். பயங்கரவாதிகளுக்கு பணம் செல்வதைத் தடுத்துவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. உண்மையில் பயங்கரவாதிகளிடம் இருந்து புதிய ரூபாய் 2,000 நோட்டுகள்தான் சிக்கின. இவ்வாறு ப.சிதம்பரம் வாதிட்டார்.












Click it and Unblock the Notifications