"ராகுல் தான் காங்கிரஸின் முகம்.." உடைத்து பேசிய சிதம்பரம்! ஒரே அணியில் திரளும் மூத்த தலைவர்கள்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்ய விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக மூத்த தலைவர் ப.சிதம்பரம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள இந்தத் தேர்தலில், ராகுல் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுக்கும் ராகுல் காந்தி போட்டியிடப் போவது இல்லை என்பதில் உறுதியாக உள்ளார். கட்சியைப் பலப்படுத்த அவர் பாத யாத்திரை சென்று வருகிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தியே மறுத்தாலும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விடுவதாக இல்லை. காங்கிரஸ் காரியா கமிட்டியில் இருக்கும் பல தலைவர்களும் ராகுல் காந்தி தான் தலைவராக வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். ராகுல் காந்தி தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சியில் முக்கியமான இடத்தில் இருப்பார் என்று சிதம்பரம் குறிப்பிட்டார். முன்னதாக அசோக் கெலாட் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் இதை கருத்தை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ப.சிதம்பரம்
ராகுல் காந்தி இதுவரை தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்தே வந்தாலும் கூட, அவர் எப்போது வேண்டுமானாலும் மனதை மாற்றிக் கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்தக் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத் தேர்தல் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையாக நடைபெறும் என்றும் அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

வேட்பாளர் பட்டியல்
ஆங்கில செய்தி ஏஜென்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "எந்தவொரு அரசியல் கட்சியும் வாக்காளர் பட்டியலை வெளியிட மாட்டார்கள். காங்கிரஸில் வாக்களிக்கும் நபர்களின் பட்டியலைப் போட்டியிட விரும்புவோர் மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர் பட்டியலைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த விவகாரத்தில் கடிதம் எழுதிய எம்பிகளும் இந்த நடைமுறையைக் கேட்டு திருப்தி அடைந்துள்ளனர்.

ஒரு மனதாகத் தேர்தல்
பாஜக அல்லது வேறு எந்த கட்சியிலும் தேர்தல் நடக்கும் போது வாக்காளர் பட்டியல் வெளியிட்டதாகத் தெரியவில்லை. நட்டா பாஜக தலைவர் தேர்தலுக்குப் போட்டியிட்ட போது வாக்காளர் பட்டியல் எதுவும் வெளியிடவில்லை. காங்கிரஸ் தலைவர் ஒருமனதாகத் தேர்வானாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏனென்றால் பாஜகவிலும் கூட நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங் என அனைவரும் ஒரு மனதாகத் தேர்வானவர்கள் தான்.

அவசியம் இல்லை
ராகுல் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்பதே காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், இப்போது வரை ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றே தொடர்ந்து கூறி வருகிறார். அவர் தனது மனதை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருப்பவர் தான் கட்சியின் முகமாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. கடந்த காலங்களில் காங்கிரஸில் தலைவர் பதவியில் ஒருவர் இருந்து இருந்தாலும், கட்சியின் முகமாக வேறு ஒருவர் இருந்து உள்ளார்.

கட்சியின் முகம்
ராகுல் காந்தி தலைவர் பதவிக்கு வந்தால், அவரே கட்சியின் முகமாகவும் இருப்பார். ஆனால், அவர் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. தலைவராகத் தேர்வானாலும் இல்லையென்றாலும் கட்சியில் ராகுல் காந்தியின் பங்கு முக்கியமானதாக இருக்கும். அதேநேரம் காங்கிரஸ் தலைவராக வேறு ஒருவர் தேர்வானாலும் கூட அவருக்கு அதே அதிகாரம் தான் இருக்கும்.

பேரணி
ராகுல் காந்தி இப்போது பாத யாத்திரை செல்லும் நிலையில் மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. இந்த நாடு பிரிந்து இருக்க முடியாது, வெறுப்பு பரவுவதை நாம் அனுமதிக்க முடியாது என்பதை மக்கள் இப்போது தான் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள். இந்த யாத்திரைக்கு இப்படியொரு வரவேற்பு கிடைக்கும் என பாஜக எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் எதோ பேச வேண்டும் எனக் குற்றஞ்சாட்டி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications