சிறையில் நாற்காலி இல்லை.. கோர்ட்டில் ப.சி. புகார்! சின்ன விஷயத்தை பெருசாக்காதீங்க.. அரசு வக்கீல்!!
டெல்லி: திஹார் சிறையில் நாற்காலிகளை வேண்டும் என்றே அகற்றிவிட்டனர்; இதனால் முதுகு வலி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார். இதற்கு, நாற்காலி விவகாரம் ஒரு சின்ன விஷயம்.. இதை உணர்ச்சிப்பூர்வமானதாக்காதீங்க என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.
டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப.சிதம்பரம் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 3-ந் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விசாரணையின் போது, சிறையில் என்னுடைய அறைக்கு வெளியே நாற்காலிகள் இருந்தன. நான் அதை பகல் நேரங்களில் பயன்படுத்தி வந்தேன். ஆனால் தற்போது அந்த நாற்காலிகள் அகற்றப்பட்டுள்ளன. நான் பயன்படுத்திய ஒரே காரணத்தால் அவை அகற்றப்பட்டுள்ளன.
திஹார் சிறை வார்டனும் கூட நாற்காலி இல்லாமல்தான் இருக்கிறார். நாற்காலி இல்லாததால் முதுகுவலி ஏற்பட்டுள்ளது என ப.சிதம்பரம் புகார் தெரிவித்தார். மேலும் 3 நாட்களுக்கு முன்னர் நாற்காலிகள் அங்கு இருந்தன. தற்போது நாற்காலியும் தலையணையும் சிதம்பரத்துக்கு கொடுக்கப்படவில்லை என அவரது வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறினார்.
இதற்கு பதில் கொடுத்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இது ஒரு சின்ன விவகாரம். இதை உணர்ச்சிப்பூர்வமானதாக்க வேண்டியதில்லை. சிதம்பரம் அறையில் தொடக்கம் முதலே எந்த நாற்காலியுமே இருந்தது இல்லை என்றார்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரத்துக்கு தலையணை கொடுப்பது குறித்து சிறை அதிகாரிகள் பரிசீலித்து முடிவு செய்யலாம் என நீதிபதி கூறினார்.












Click it and Unblock the Notifications