"5 கிலோ குறைந்துவிட்டார் ப சிதம்பரம்.. குடல் அழற்சி நோயால் அவதி.. தனித்துவமான சிகிச்சை தேவை"
டெல்லி: ப சிதம்பரத்துக்கு குடல் அழற்சி நோய் இருப்பதால் அவருக்கு தனித்துவமான சிகிச்சை தேவைப்படுகிறது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் 14 நாட்கள் சிபிஐ காவலில் இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் திகார் சிறையில் இருந்தார்.
தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கஸ்டடியில் இருந்து வருகிறார். அவருக்கு சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் இருப்பதால் வீட்டு உணவு வழங்க அனுமதி கோரினார். ஆனால் நீதிமன்றமோ ஒரு வேளை மட்டுமே வீட்டு உணவு வழங்க அனுமதி வழங்கியது.
அரபி கடலில் மாற்றம்.. தமிழகம் முழுவதும் இன்றும் மழை கொட்டும்.. 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
மருத்துவமனை
இதனால் சிறை உணவு அவருக்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து அவர் உடல் உபாதை காரணமாக அக்டோபர் 7, 23, 25, 28 ஆகிய தேதிகளில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
டெல்லி எய்ம்ஸ்
இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் ஹைதராபாத்தில் சிகிச்சை மேற்கொள்ள 2 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்குமாறு கடந்த 24-ஆம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எனினும் நீதிமன்றமோ அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனை
இதனிடையே அவர் கடந்த திங்கள்கிழமை வயிற்று வலி மற்றும் உடல் உபாதை காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்ததன் பேரில் அங்கு சென்ற அவர் அன்று இரவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தீவிரமான நோய்
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறுகையில் ப.சிதம்பரத்துக்கு குடல் அழற்சி நோய் உள்ளது. இந்த நோய் இரைப்பை குடல் பகுதியை பாதிக்கும். வயிற்று வலி, வயிற்று போக்கு, காய்ச்சல், எடை குறைப்பு ஆகியன இந்த நோய்க்கு அறிகுறியாகும். அழற்சி தீவிரமாக இருந்தால் மலம் கழிக்கும் இடத்திலிருந்து ரத்தம் கூட வரும் அளவுக்கு இது மிகவும் தீவிரமான நோய் ஆகும்.
சிகிச்சை
எனவே இதன் தீவிரத்தை பயாப்சி என்ற பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் ப சிதம்பரத்துக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை. அவருக்கு பல்நோக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.
உடல்நிலை
கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் விண்ணப்பம் செய்திருந்தார். அதன் மீதான விசாரணையின் போது அவரது வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில் சிறையிலிருந்த ப சிதம்பரம் 5 கிலோ குறைந்துள்ளார். அதாவது 73 கிலோவிலிருந்து 68 கிலோவுக்கு வந்துவிட்டார். எனவே அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.