அதானி குழும மோசடிகள், ராகுல் விவகாரம்- நாடாளுமன்றம் 14-வது நாளாக முடக்கம்!
டெல்லி: அதானி குழும மோசடிகள் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இருசபைகளையும் 14-வது நாளாக எதிர்க்கட்சிகள் முடக்கினர். நாடாளுமன்ற இரு சபைகளும் ஏப்ரல் 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகளின் போராட்டமும் தொடருகிறது. ராகுல் காந்தி வெளிநாட்டில் பேசிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் வலியுறுத்தினர். அதேநேரத்தில் அதானி குழும மோசடிகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசினார் ராகுல் என ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அண்மையில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனை பெறும் நபர் எம்பி, எம்எல்ஏவாக நீடிக்க முடியாது. இதனடிப்படையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு எம்பி பதவி பறிக்கபட்டது.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து காங்கிரஸ், போராட்டங்களை நடத்தி வருகிறது. நாடாளுமன்றத்தின் இருசபைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன. இன்றும் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் 14-வது நாளாக முடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் ஏப்ரல் 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications