நாட்டின் ஒற்றுமைக்கு தடையாக இருந்ததால் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு குழிதோண்டி புதைப்பு- மோடி
டெல்லி: நாட்டின் ஒற்றுமைக்கு தடையாக இருந்ததால் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து குழிதோண்டி புதைத்துவிட்டோம். தனித்தனியாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்தது இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் என்று லோக்சபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.
நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்றும், இன்றும் அரசியல் சாசனம் குறித்து விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 26 ம் தேதி அரசியலமைப்பு சாசன நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நம் நாட்டின் அரசியலமைப்பு அமலுக்கு வந்து 75 ஆண்டு ஆனதை பெருமைப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் இன்று அரசியலமைப்பு தின சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று இந்த விவாதத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் உரையாற்றினர். பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி, ஆ ராசா உள்பட பல தலைவர்கள் உரையாற்றினர். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றுவது இல்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் சரமாரியாக குற்றம்சாட்டினர். இந்நிலையில் தான் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் லோக்சபாவில் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி இன்று மாலையில் பதிலுரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
ஜனநாயகத்தின் திருவிழாவை நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம். உலகில் ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உள்ளதை பெருமையாக கூறுகிறேன். இந்த விவாததத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா பற்றி கூறிய கருத்துகளை புறம்தள்ளி நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது.இந்த சாதனையுடன் நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு பார்வை இருந்தது. இந்திய அரசியல் சாசனத்தை அடிப்படையாக கொண்டு நாம் முன்னேறி வருகிறோம். நாட்டின் பொருளாதார ஒற்றுமைக்காகவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஒரே நாடு ஒரே வரி என்பது நமது பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறது. உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும். இந்தியா ஒரே நாடு என்பதை வலியுறுத்த தான் 370வது சட்ட பிரிவு குழித்தோண்டி புதைக்கும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ’’ என்றார்.












Click it and Unblock the Notifications