அமளி, துமளி.. ஆர்ப்பாட்டம்.. நாடாளுமன்ற இரு சபைகளும் முன்கூட்டியே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா இரு சபைகளும் முன்கூட்டியே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் அடுத்த வாரம் வரை நடைபெற இருந்தது. ஆனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு எம்.பி.க்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று இரு சபைகளின் நடவடிக்கைகளும் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. நடப்பு கூட்டத் தொடரில் அருணாச்சல பிரதேச எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைய முயன்ற சம்பவம் பெரும் அமளிக்கு காரணமாக இருந்தது. சீனாவின் ஊடுருவல் தொடர்பாக இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தினர்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்க அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் சீனாவின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது; இதில் வீரர்கள் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. எந்த உயிரிழப்பு அல்லது படுகாயங்கள் வீரர்களுக்கு ஏற்படவில்லை என அந்த அறிக்கையில் ராஜ்நாத்சிங் தெரிவித்திருந்தார். ராஜ்நாத்சிங்கின் இந்த அறிக்கை மீது விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இதனை ஏற்க மத்திய அரசு மறுத்தது. இதனால் இருசபைகளிலும் அமளி ஏற்பட்டு சபை நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. அதேபோல், பீகார் கள்ளச்சாராய மரணங்கள் விவகாரமும் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முக்கிய இடம்பிடித்தது.
போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்திருந்தார். அமித்ஷாவின் இந்த விளக்கமும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மாநில அரசுகளை குற்றம்சாட்டுவதைப் போல அமித்ஷாவின் பேச்சு இருந்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் மகாத்மா காந்தியடிகள் சிலை அமைந்துள்ள இடம் போராட்ட களமாக இருந்தது. எல்லையில் சீனாவின் ஊடுருவல் தொடர்பாக விவாதம் கோரி 12 எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கூட்டாக போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத் தொடரில் இடம்பெற்ற முக்கியமான விவகாரம், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பேச்சு. ராஜஸ்தானில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் பாஜகவினரை கடுமையாக தாக்கிப் பேசினார் கார்கே. நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்கு பாஜக என்ன செய்தது? பாஜகவினரின் வீட்டு நாயாவது தியாகம் செய்திருக்குமா? என்றெல்லாம் காட்டமாக பேசினார் கார்கே.
மல்லிகார்ஜூன கார்கேவின் இந்தப் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தி அக்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மல்லிகார்ஜூன கார்கே மன்னிப்பு கேட்கவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் கார்கேவுக்கு எதிராக மத்திய அமைச்சர்கள் வரிந்து கட்டினர். ஆனால் விடாத மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியதை வைத்து ஏன் அமளியில் ஈடுபடுகிறீர்கள்? உண்மையில் பாஜக விடுதலைப் போராட்டத்தில் என்ன பங்களிப்பு செய்தது? என மீண்டும் ராஜ்யசபாவில் கேள்வி கேட்க.. அமளிக்காடானது சபை.
இன்றைய கடைசி நாளிலும் அதே அமளி, ஆர்ப்பாட்டங்கள்தான். நாடாளுமன்ற வளாகத்தில் மின்துறையை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். நடப்பு கூட்டத் தொடர் அடுத்த வாரம் வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மாநிலங்களுக்கு எம்பிக்கள் செல்ல வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்று லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் முன்கூட்டியே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications