லோக்சபாவில் நுழைய எப்படி பாஸ் கொடுத்தீங்க? பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவிடம் வாக்குமூலம்.. பரபர தகவல்
டெல்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி சம்பவம் தொடர்பாக பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா மற்றும் அவரது தனி உதவியாளரிடம் டெல்லி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற முடிவு செய்துள்ளது குறித்து பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 13ம் தேதி லோக்சபாவின் பார்வையாளர் மாடத்தில் இருந்து ஏராளமானவர்கள் சபை நடவடிக்கையை பார்த்தனர்.

அப்போது திடீரென்று 2 பேர் பார்வையாளர் மாடத்தில் இருந்து லோக்சபா அரங்குக்குள் குதித்தனர். அவர்கள் மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் ஸ்பிரே மற்றும் கலர் புகையை கக்கும் குப்பிகளை திறந்தனர். இதனால் லோக்சபா எம்பிக்கள் இருக்கைகளை விட்டு எழுந்து ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் எம்பிக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து பாதுாவலர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் சாகர் சர்மா மற்றும் கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த டி மனோ ரஞ்சன் (வயது 35) என்பதும், அவர்கள் கர்நாடகா மாநிலம் மைசூர்-குடகு நாடாளுமன்ற தொகுதியின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா வழங்கிய பாஸ் மூலம் லோக்சபா நடவடிக்கைகளை பார்க்க சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
‛‛காரணம் இதுதான்’’.. லோக்சபாவில் ‛ஸ்பிரே’ அடித்தது ஏன்? கைதானவர்கள் கூறிய பரபர வாக்குமூலம்.. ஷாக்
அதேபோல் அன்றைய தினம் நாடாளுமன்றத்தின் வளாகத்தில் கலர் புகை குண்டு வைத்ததாக ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே (25) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவத்துக்கு சூத்திரதாரியான லலித் ஜா 2 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை மொத்தம் 6 பேர் கைதான நிலையில் அவர்களிடம் டெல்லி போலீசார் மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற தாக்குதலில் நீளும் தொடர்பு.. மேலும் 2 பேர் அதிரடி கைது.. யார் இவர்கள் தெரியுமா?
இத்தகைய சூழலில் தான் லோக்சபாவில் நுழைய சாகர் சர்மா மற்றும் மனோ ரஞ்சன் ஆகியோருக்கு பாஸ் வழங்கிய பிரதாப் சிம்ஹா எம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவிடம் விசாரணை நடத்த டெல்லி தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். அதாவது குற்றத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு எந்த அடிப்படையில் பாஸ் வழங்கப்பட்டது? அவர்களின் பின்னணி என்ன? என்பது குறித்த முக்கிய விஷயங்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்த விசாரணை என்பது நடத்தப்பட உள்ளது.
பிரதாப் சிம்ஹா மட்டுமின்றி அவரது தனி உதவியாளரிடமும் டெல்லி தனிப்படை போலீசார் சம்பவம் குறித்து விசாரிக்க உள்ளனர். அதன்படி விரைவில் டெல்லி தனிப்படை போலீசார் டெல்லியில் உள்ள பிரதாப் சிம்ஹா எம்பியின் வீட்டுக்கு சென்று அவரிடம் கேள்விகள் கேட்டு அவரது பதில்களை வாக்குமூலம் போல் பதிவு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications