நாடாளுமன்றம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங். எம்.பி.க்கள் மட்டும் நாள்தோறும் போராட்டம்
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரண்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் தனியே போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
தேவையான பிரேக் வந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்.. 3 முக்கியமான அப்டேட்கள்!
ராஜ்யசபாவில் கடந்த மழைக்கால கூட்டத் தொடரின் கடைசிநாளில் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அமளியில் ஈடுபட்டதாக 12 எதிர்க்கட்சி எம்.பிக்கள் ராஜ்யசபாவில் இருந்து நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திரிணாமுல் காங். புறக்கணிப்பு
இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டோலா சென், சாந்தா செட்ரி இருவரும் அடக்கம். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
புரியாத புதிர் திரிணாமுல் காங்.
மேலும் ராஜ்யசபாவில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த போதும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்யவில்லை. அதே நேரத்தில் 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில் திடீரென திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் பங்கேற்றனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸின் நிலைப்பாடு எதிர்க்கட்சிகளுக்கு புரியாத புதிராக இருந்து வருகிறது.
டிச.23 வரை போராட்டம்
இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங். எம்.பிக்கள் டோலா சென், சாந்தா செட்ரி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் தனியே போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 2 எம்.பிக்களும் தனியே நின்று போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடையும் டிசம்பர் 23-ந் தேதி வரை இந்த போராட்டம் நீடிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெங்கையா நாயுடு திட்டவட்டம்
முன்னதாக நேற்று ராஜ்யசபாவில் 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவில் வலியுறுத்தின. ஆனால் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முடிவை திரும்பப் பெற முடியாது என திட்டவட்டமாக மறுத்தார். இதற்கு பதில் தரும் வகையில், மழைக்கால கூட்டத் தொடரில் நடைபெற்ற நிகழ்வுகளுக்காக குளிர்கால கூட்டத் தொடரில் எப்படி சஸ்பெண்ட் செய்ய முடியும்? 12 எம்.பிக்களும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர்கள் ஒருமித்த குரலில் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.