அதானி ஊழல்: நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்றும் போராட்டம்- ராஜ்யசபாவில் வெளிநடப்பு!
டெல்லி: அதானி ஊழல் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு அனுமதி மறுப்பதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் இன்றும் 2-வது நாளாக இந்தியா கூட்டணியின் எம்பிக்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். மேலும் ராஜ்யசபாவில் கேள்விகளை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
அதானி ஊழல் விவகாரத்தில் அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதானி குழுமத்தின் சூரிய சக்தி மின்சாரத்தை மத்திய அரசு நிறுவனம் மூலமாக மாநில மின்சார வாரியங்கள் வாங்குவதற்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்தது; இந்த ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை அதானி குழுமம் பெற்றது என்பதுதான் அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு.

அதானி குழுமத்தின் இந்த முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அமைக்க வேண்டும்; நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணியின் வேண்டுகோள். ஆனால் இதனை மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டும் வருகின்றன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று அதானி ஊழல்கள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த கோரி இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இன்றும் நாடாளுமன்றத்தின் முன்பாக பதாகைகளை ஏந்திய படி இந்தியா கூட்டணியின் அதே கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.
இதனிடையே ராஜ்யசபாவில் இன்று கேள்விகளை எழுப்புவதற்கு தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி எதிர்க் கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications