பெகாசஸ் விவகாரம்.. பிரதமரை விசாரிக்க வேண்டும்.. அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்.. காங் வலியுறுத்தல்
டெல்லி: பெகாசஸ் விவகாரத்தில் நாளுக்கு நாள் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
Recommended Video
இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ குரூப் என்ற நிறுவனம் பெகாசஸ் என்ற ஸ்பைவேரை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்பைவேரை கொண்டு ஒருவரது மொபைலை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும்.
இந்த பெகாசஸ் மூலம் ஒருவர் யாருடன் பேசுகிறார், என்ன பேசுகிறார், எங்குச் செல்கிறார் என அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக கேமரா, மைக் போன்றவற்றைக் கூட ஆன் செய்ய முடியும்.

பெகாசஸ் ஸ்பைவேர்
இந்நிலையில், இந்த பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி உலகெங்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், பத்திரிக்கையாளர்கள் எனப் பலரது மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தி கார்டியன், வாஷிங்டன் டைம்ஸ் உள்ளிட்ட 16 ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவிலும் காங்கிரஸின் ராகுல் காந்தி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், திரிணாமுல் முக்கிய தலைவர்கள், 40 செய்தியாளர்கள் உட்பட அனைவரின் செல்போன்களும் உளவு பார்க்கப்பட்டதாகச் செய்தி வெளியானது.

காங்கிரஸ் தாக்கு
இதனை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களை ஹேக் செய்து உளவு பார்க்கும் பணிகளில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளனர்.

அமித் ஷா
கடந்த 2019இல் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு முன் 40க்கும் மேற்பட்ட நபர்களின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை தொடங்குவதற்கு முன்பு, உள் துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும். அதேபோல பிரதமர் மோடியிடம் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் இந்தியா
காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், "டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிப்பதாகப் பிரதமர் மோடி கூறுகிறார், ஆனால் கண்காணிப்பு இந்தியாவாக அது எப்படி மாறியுள்ளது என்பதையே நாம் பார்க்கிறோம். என்எஸ்ஓ நிறுவனம் இந்த ஸ்பைவேரை பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராட அரசு அமைப்புகளால் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகக் கூறுகிறது. ஆனால் இங்கு மோடிக்கு எதிராகப் பேசும் நபர்களைக் குறி வைத்துப் பயன்படுத்துகின்றது. நாளை நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியும் பெகாசஸ் குறித்து கேள்வி எழுப்பவுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் திட்டம்
முன்னதாக, இன்று நாடாளுமன்றத்தில் ஐடி துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சட்ட விரோதமான முறையில் நாட்டில் யாரையும் உளவு பார்க்கவில்லை என விளக்கமளித்திருந்தார். இருப்பினும், இது தேச பாதுகாப்பு தொடர்பானது என்பதால் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், வரும் நாட்களில் பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் முக்கியமானதாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications