நீட் முதுநிலை தேர்வு மீண்டும் தள்ளிவைப்பு? டென்ஷனில் தேர்வர்கள்.. சுப்ரீம் கோர்ட்டில் திடீர் வழக்கு!
டெல்லி: நீட் முதுநிலை தேர்வு வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள சூழலில் நீட் தேர்வை சுற்றி அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இந்நிலையில், நீட் தேர்வை மீண்டும் தள்ளி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேசிய மருத்துவக் கல்வி தேர்வு வாரியத்தினால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முதுகலை நீட் முதுநிலை தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருந்தது. இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவு ஆகியவற்றால் பெரும் சர்ச்சைகள் வெடித்ததன் காரணமாக முதுகலை நீட் தேர்வு நடைபெறுவதற்கு முந்தைய நாளில் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ல் நடைபெறும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் அறிவித்தது. வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று நீட் முதுநிலை தேர்வு, காலை, மதியம் என இரண்டு ஷிப்ட்களாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 2 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவ மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்வர்களுக்கு தேர்வு மையங்கள் வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்டு இருந்தது. சுமார் 1000 கிலோ மீட்டர் தூரம் சென்று தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் உள்ளாக்கப்பட்டனர். இது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாநிலங்களவை திமுக எம்.பி வில்சன் உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து இதுகுறித்து கோரிக்கையை விடுத்தனர். தேர்வு மையங்களை தேர்வர்களின் மாவட்டங்களுக்குள் அல்லது குறைந்தபட்சம் அந்தந்த மாநிலங்கள் உள்ளேயே மறு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில், தமிழக மருத்துவர்கள் முதுகலை நீட் தேர்வை தமிழகத்திற்குள்ளேயே எழுதும் படி தேர்வு மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் டெலிகிராம் சேனல்களில் கசிந்ததாக தகவல் பரவி வருகிறது. வினாத்தாள்கள் 70,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், நீட் முதுநிலைத் தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், நீட் தேர்வை மீண்டும் தள்ளி வைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
31.07.2024 அன்று தேர்வு நகரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறிப்பிட்ட மையங்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட உள்ளது. தேர்வுகளில் ஏதேனும் முறைகேடுகளைத் தடுக்கவே தொலைதூரங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றாலும், குறுகிய காலத்தில் அறிவிப்பைக் கொடுத்ததால், மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வது மிகவும் கடினமாகிவிட்டது என்று மனுதாரர் விஷால் சோரன் வலியுறுத்தி உள்ளார்.
இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வில் பங்கேற்க உள்ளனர். தேர்வு 185 தேர்வு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, இதனால் ரயில் டிக்கெட் கிடைக்காததுடன், விமானக் கட்டணங்கள் மிக அதிக அளவில் உள்ளன. எனவே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களுக்குச் செல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே, தேர்வு மையங்களுக்குச் செல்வதற்கு திட்டமிட வசதியாக நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும், அனைத்து தேர்வர்களும் ஒரே மாதிரியான வினாத்தாளை எதிர்கொள்ளும் வகையில், 2 ஷிப்ட்களாக இல்லாமல், ஒரே நேரத்தில் தேர்வு எழுத உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications