நாட்டுக்கு உணவு தருபவர்களுக்கு ஆதரவு தருவது நமது கடமை - ராகுல்காந்தி
விவசாயிகளுக்கு, நாட்டுக்கு உணவளிப்பவர்களுக்கு ஆதரவளிப்பது நமது கடமையாகும் என்று ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்
டெல்லி: பீகார் விவசாயி எம்எஸ்பி-ஏபிஎம்சி இல்லாமல் பெரும் சிக்கலில் உள்ளனர், இப்போது பிரதமர் முழு நாட்டையும் இந்த கிணற்றில் தள்ளியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், விவசாயிகளுக்கு, நாட்டுக்கு உணவளிப்பவர்களுக்கு ஆதரவளிப்பது நமது கடமையாகும் என்று ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தலைநகர் டெல்லி கடும் குளிரையும் தாண்டி தகிக்கிறது.
தலைநகருக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். விவசாயிகளிடம் மத்திய அமைச்சர்கள் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அவை அத்தனையும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், 3 கருப்பு வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்துசெய்வதற்கு குறைவான எந்த தீர்வையும் ஏற்றுக்கொள்வது, இந்தியாவுக்கும், விவசாயிகளுக்கும் செய்யும் துரோகம் என்று பதிவிட்டிருந்தார்.
வேளாண் சட்ட மசோதாக்களை கடுமையாக எதிர்க்கின்றனர் விவசாயிகள். குறைந்த பட்ச ஆதார கொள்முதல் இல்லாமல் போனதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பீகாரில் ஏற்கெனவே ஏபிஎம்சி முறை ஒழிக்கப்பட்டு 2006ஆம் மாற்று முறை கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து குறைந்தபட்ச ஆதார விலை அளிக்க வேண்டிய விவசாய விளைபொருட்களை அரசு வாங்குவது கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தப்பட்டதுதான் நடந்தது.
விவசாயிகள் போராட்டம்...இன்று 5ம் கட்ட பேச்சுவார்த்தை.... முடிவு கிடைக்குமா!
கோட்பாட்டளவில் ஏபிஎம்சி முறையில் விவசாயப் பொருட்களை வர்த்தகர்கள் மண்டியில் ஏலம் எடுப்பார்கள், அதிகவிலை கொடுக்க முன்வருபவர்களுக்கு விற்கப்படும். ஆனால் தனியார் மண்டிகளில் இந்த முறை கிடையாது. பீகார் தனியார் மண்டிகளில் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு மிகக்குறைந்த விலையே கொடுக்கப்பட்டது, அதுவும் சீசனுக்கு சீசன் கடுமையாக மாறும். உதாரணமாக பீகாரில் சோளத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,200 கடந்த ஆண்டு இருந்த விலை நடப்பு ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ.1300 ஆகச் சரிந்தது.
இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, "பீகார் விவசாயி எம்எஸ்பி-ஏபிஎம்சி இல்லாமல் பெரும் சிக்கலில் உள்ளனர், இப்போது பிரதமர் முழு நாட்டையும் இந்த கிணற்றில் தள்ளியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், விவசாயிகளுக்கு, நாட்டுக்கு உணவளிப்பவர்களுக்கு ஆதரவளிப்பது நமது கடமையாகும்" என்று ட்வீட் செய்துள்ளார் .