இங்கே ரபேல் ஒப்பந்தம் குறித்த விவாதம்.. அங்கே ஓடி ஒளிந்துள்ள பிரதமர்.. ராகுல் கடும் தாக்கு
டெல்லி: லோக்சபாவில் ரபேல் ஒப்பந்தம் குறித்த விவாதம் நடந்துகொண்டிருக்கையில் பிரதமர் மோடியோ அவரது அறையில் ஒளிந்து கொண்டிருக்கிறார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.
ரபேல் ஒப்பந்தம் குறித்த விவாதம் இன்று லோக்சபாவில் நடந்தது. அப்போது அதன் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி பேசுகையில், ரபேல் மீதான விவாதம் குறித்து பேசுவதற்கு அதிமுக எம்பிக்கள் என்னை தடுப்பது வருத்தமாக இருக்கிறது. அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து வந்துள்ள அதிமுக எம்பிக்கள் பாஜகவுக்கு சேவை செய்வது வருத்தம் அளிக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக என்னுடைய பணி அரசுக்கு எதிராக கேள்விகளை எழுப்புவதுதான். நேற்று பிரதமர் நரேந்திர மோடி அளித்த நேர்காணலின் ஒருபகுதியை பார்த்தேன்.
கேள்வி கேட்கும் உரிமை
அதில் அவர் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஒன்றரை மணி நேரம் பேசினார். ரபேல் விவகாரம் குறித்து தன்னை யாரும் கேள்வி எழுப்ப முடியாது, குற்றம் கூறவும் முடியாது என்று கூறியுள்ளார். இது தவறு. ஒட்டுமொத்த நாடும் பிரதமரை கேள்வி கேட்கும் உரிமை உள்ளது.
ஒன்றரை மணி நேரம்
ஒன்றரை மணி நேரம் நேர்காணலில் பேசிய நரேந்திர மோடி ரபேல் குறித்த முக்கியமான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காதது ஏன் என இந்திய மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ரபேல் விவகாரத்தில் 3 விவகாரங்களில் கேள்விகள் உள்ளன. ஒன்று ஒப்பந்தம் தொடர்பான நடைமுறை, 2-ஆவது விலை, 3ஆவது பணம். இதுகுறித்த கேள்விகளைத்தான் நாங்கள் ஆரம்பத்திலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
36 விமானங்கள்
126 விமானங்களுக்கு பதிலி 36 விமானங்களை அதுவும் அவசரமாக வேண்டும் என மத்திய அரசு ஏன் வலியுறுத்தியது. 126 விமானங்கள் வேண்டாம் என விமான படை கூறியதா? 36 விமானங்களை அவசரமாக வேண்டும் என்றீர்களே இன்று வரை ஏன் ஒரு விமானம் கூட இந்திய மண்ணில் வரவில்லை?
|
ஒளிந்த பிரதமர்
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஆரம்பத்திலிருந்து ஒப்பந்தம் கையெழுத்திடும் வரை அனைத்து நடைமுறைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தற்போது கூட ரபேல் விமான ஒப்பந்ம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பிரதமர் ஒளிந்து கொண்டிருக்கிறார் என ராகுல் கூறியுள்ளார்.