கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம்கேர்ஸ் மூலம் மாதம் ரூ4,000- பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம்கேர்ஸ் குழந்தைகள் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ4,000 வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் இன்று பல திட்டங்களை துவக்கி வைத்தார்.

குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் பலன்களை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் பிற அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா பெருந்தொற்றால் தங்கள் பெற்றோர் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த குழந்தைகளுக்கு அனுதாபங்கள். தற்போதுள்ள சூழலில் இந்த குழந்தைகள் நாள்தோறும் சந்திக்கும் பிரச்சினைகளை வார்த்தைகளால் சொல்ல இயலாது. நான் பிரதமராக உங்களுடன் பேசவில்லை, உங்கள் குடும்ப உறுப்பினராக பேசுகிறேன்.
பிஎம் கேர்ஸ் என்பது, கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைப்பதற்கான ஒரு சிறிய முயற்சி. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உங்களுடன் உணர்வுப்பூர்வமாக தொடர்பில் உள்ளனர் என்பதற்கான பிரதிபலிப்பு. உயர்கல்வி அல்லது தொழில் சார்ந்த படிப்புகளைப் படிக்க விரும்பும் குழந்தைகளுக்கும் பிஎம் கேர்ஸ் திட்டம் உதவி செய்யும்.
குழந்தைகளின் அன்றாடத் தேவைகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் பிஎம் கேர்ஸ் மூலம் மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, கொரோனாவால் பெற்றோரை இழந்த, 23 வயதை அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சத்தை தவிர, ஆயுஷ்மான் அட்டை மூலம் உடல்நலம் மற்றும் உளவியல் தொடர்பான ஆலோசனைகள் சம்வாத் ஹெல்ப்லைன் மூலம் அளிக்கப்படும். ஏற்கனவே ஆயுஷ்மான் மூலம் குழந்தைகளுக்கு ரூ5 லட்சம் வழங்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்றின் மிக மோசமான வேதனையையும், அதன் தாக்கத்தையும் தைரியமாக எதிர்கொண்ட குழந்தைகளுக்கு தனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறிய பிரதமர் மோடி, பெற்றோரின் அன்புக்கு ஈடு செய்வதாக எதுவும் இருக்க முடியாது. இந்த இக்கட்டான தருணத்தில் குழந்தைகளாகிய உங்களுடன் மா பாரதி இருக்கிறது; பிஎம் கேர்ஸ் திட்டம் மூலம் குழந்தைகளுக்கான பொறுப்பை நிறைவேற்ற நாடு முயற்சி செய்கிறது.
தொற்றுநோய் பாதிப்புகளின்போது, சக மனிதர்கள் மனிதநேயத்துடன் நடந்து கொண்டனர். வாழ்க்கையில், விரக்தியின் விளிம்பில் இருந்தாலும், தன்னம்பிக்கையுடன் இருந்தால் நிச்சயம் ஒளிக்கதிர் தெரியும். இதற்கு நம்முடைய நாடே மிகச்சிறந்த உதாரணம். விரக்தி தோல்வியாக மாற குழந்தைகள் அனுமதித்து விட வேண்டாம். பெரியவர்களும், ஆசிரியர்களும் சொல்வதைக் கேட்டு குழந்தைகள் நடந்துக் கொள்ள வேண்டும். இக்கட்டான தருணங்களில் நல்ல நூல்கள் நமக்கு நம்பகமான நண்பனாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
பிஎம்கேர்ஸ் குழந்தைகள் பாதுகாப்பு திட்டமான கடந்த ஆண்டு மே 29-ந் தேதி தொடங்கப்பட்டது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நலனுக்கானது இத்திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications