“கரூர் உயிரிழப்பு சம்பவம் பெரும் துயரம் தருக்கிறது” - குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
டெல்லி: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதில் சிக்கி 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
குடியரசுத் தலைவர் தனது x பக்கத்தில், "தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் துரதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்பட்ட துயரச் செய்தியைக் கேட்டு வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டிருக்கிறார்.

அதேபோல பிரதமர் நரேந்திர மோடி, "தமிழ்நாட்டின் கரூரில் அரசியல் பேரணியின் போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் நான் துணை நிற்கிறேன். இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு மனவலிமையை கொடுக்க வேண்டுகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி, ஆங்காங்கே சிலர் மயக்கமடைய தொடங்கினர். இதனை அடுத்து விஜய் தண்ணீர் பாட்டில்களை தொண்டர்களை நோக்கி வீசியிருந்தார். அப்போதே பிரச்சாரத்தை நிறுத்தியிருந்தால் இந்த அளவுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்று பலரும் கூறுகின்றனர்.
நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் என மொத்தம் 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மிக முக்கியமாக குழந்தைகள் பலரை காணவில்லை. எனவே அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications