இயற்கை விவசாயத்துக்கு திரும்புவோம்... கெமிக்கல் உரங்களுக்கு குட்பை சொல்வோம்..பிரதமர் மோடி அழைப்பு
டெல்லி: ரசாயன உரங்களுக்கு விடைசொல்லிவிட்டு இயற்கை விவசாயத்துக்கு அனைவரும் திரும்புவோம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
குஜராத் அரசு நடத்திய இயற்கை வேளாண்மை குறித்த மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: சுதந்திரத்தின் 100-வது ஆண்டு வரை புதிய தேவைகள் மற்றும் புதிய சவால்களின் பயணத்திற்கு ஏற்றபடி விவசாய முறையைப் பின்பற்ற வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க விதையிலிருந்து வேளாண் சந்தை வரை கடந்த 6 முதல் 7 ஆண்டுகளில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மண் பரிசோதனை முதல் நூற்றுக்கணக்கான புதிய விதைகள் வரை, பிரதமரின் கிசான் சம்மான் நிதி முதல் வேளாண் உற்பத்தி செலவில், 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்தது வரை, நீர்ப்பாசனம் முதல் கிசான் ரயில் வரை வேளாண் துறையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பசுமைப் புரட்சியில் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் முக்கியப் பங்கு வகித்தன. பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் இறக்குமதி உரங்கள், விவசாயிகளின் செலவை அதிகரிப்பதோடு சுகாதாரத்தையும் பாதிக்கவும் வழி வகுக்கும். வேளாண்மை தொடர்பான பிரச்சினைகள் மோசமாவதற்கு முன்பாக நாம் நடவடிக்கை எடுப்பதற்கு இதுதான் சரியான நேரம்.

இயற்கையுடன் இணைவோம்
விவசாயத்தை ரசாயனக் கூடத்திலிருந்து மீட்டு இயற்கை ஆய்வுக் கூடத்துடன் நாம் இணைக்க வேண்டும். இயற்கை ஆய்வுக் கூடம் முற்றிலும் அறிவியல் அடிப்படையிலானது. தற்போது அதிநவீன மயத்திற்கு உலகம் மாறும்போது, அது மீண்டும் அடிப்படையை நோக்கி செல்கிறது. நாம் மீண்டும் பழைய முறையுடன் இணைகிறோம். இதை விவசாய நண்பர்கள் நன்கு புரிந்து கொள்வர்.

பழங்கால வேளாண் அறிவு
வேர்களில் அதிக தண்ணீர் பாய்ச்சும் போது பயிர் நன்கு வளர்கிறது. பழங்கால வேளாண் அறிவை நாம் மீண்டும் கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும். இந்த நோக்கில் நாம் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். நவீன அறிவியல் கட்டமைப்புக்கு ஏற்ப நமது பழங்கால வேளாண் அறிவை மாற்ற வேண்டும். பழங்கால வேளாண் அறிவு குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நிலத்தில் வைக்கோலை போட்டு நிலத்தை தீயிட்டு எரிப்பதால் அதன் விளைச்சல் திறன் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் வைக்கோல் எரிப்புப் போக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.

ஆபத்தான ரசாயனம்
ரசாயனம் இல்லை என்றால் பயிர்கள் நன்றாக வளராது. ஆனால் உண்மை முற்றிலும் எதிர்மறையாக இருக்கிறது. முன்காலத்தில் எந்த ரசாயனமும் இல்லை ஆனால் அறுவடை நன்றாக இருந்தது. மனித வளர்ச்சியின் வரலாறு இதைக் கண்கூடாகக் கண்டுள்ளது. புதிய விஷயங்களை கற்பதோடு நமது விவசாயத்தை அழிக்கும் தவறான நடைமுறைகளை நாம் தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் வேளாண் அறிவியல் மையங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்.

பலன் தரும் இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயத்திலிருந்து அதிகம் பயனடைபவர்களில் சுமார் 80% பேர், இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளாக இருப்பர். பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்களுக்கு அதிகம் செலவு செய்கின்றனர். அவர்கள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பினால் அவர்களது நிலை மேம்படும்.

இயற்கை விவசாயமும் மக்கள் இயக்கமும்
இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒவ்வொரு மாநில அரசும் முன்வரவேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தது ஒரு கிராமத்தை இயற்கை விவசாயத்துடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சுற்றுச் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டில் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தோம். வாழ்க்கை ஒரு உலகளாவியத் திட்டம். இதுதொடர்பாக 21-ம் நூற்றாண்டில் இந்தியாவும் அதன் விவசாயிகளும் வழி நடத்த உள்ளனர். சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவில் பாரதத்தாயின் நிலத்தை ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளிலிருந்து விடுவிக்க நாம் உறுதியேற்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications