'வந்தே பாரத்' விழாவில் ஜெய்ஸ்ரீராம் முழக்கம் எழுப்பிய பாஜக- மேடை ஏற மறுத்த மமதா பானர்ஜி!
கொல்கத்தா: தாய் ஹீராபென் மோடியின் சிதைக்கு தீ முட்டிய சிறிது நேரத்திலேயே தாம் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி மேற்கு வங்கத்தின் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஹீராபென் மோடியின் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இரங்கல் தெரிவித்த போது பிரதமர் மோடி உணர்வுவயப்பட்டவராக துயரத்துடன் அமர்ந்திருந்தார். இந்நிகழ்வில் வெறுப்பேற்றும் வகையில் பாஜக தொண்டர்கள் ஜெய்ஸ்ரீராம் என கோஷங்கள் எழுப்பியதால் மேடை ஏற மமதா பானர்ஜி மறுத்தார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (வயது 100) மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். ஹீராபென் மோடி இன்று அதிகாலை காலமான தகவல் கிடைத்ததும் உடனடியாக குஜராத் விரைந்தார் பிரதமர் மோடி. தமது தாயாருக்கு இறுதி வணக்கத்தை செலுத்திய பின், அவரது உடலை தோளில் சுமந்து காந்திநகர் தகன மயானத்துக்கு கொண்டு சென்றார். ஹீராபென் மோடியின் சிதைக்கு பிரதமர் மோடி இறுதி சடங்குகள் செய்து தீ மூட்டினார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு நாட்டின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குஜராத் மாநிலம் சென்று பிரதமர் மோடிக்கு ஆறுதல் கூறி இருக்கிறார். இதேபோல் அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் குஜராத் செல்ல இருக்கின்றனர்.
தாயார் இறந்த நிலையில், பிரதமர் மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் தாம் ஏற்கனவே ஒப்புக் கொண்ட அரசு நிகழ்ச்சிகள் எந்தவித தடையும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதனடிப்படையில் மேற்கு வங்கத்தின் வந்தே பாரத் ரயில் சேவையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அத்துடன் பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மமதா பானர்ஜி, மோடியின் தாயார் மறைவைக் குறிப்பிட்டு ஆறுதல் தெரிவித்தார். அப்போது பிரதமர் மோடி உள்ளம் உடைந்து துயரம் தோய்ந்த முகத்துடன் சோகமாக உருவாக மேடையில் அமர்ந்திருந்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, என் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கு வங்க மாநிலத்துக்கு நேரில் வந்து மக்களை சந்திக்க முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என உருக்கமாக கூறினார். தாயின் உடலை தகனம் செய்த கைகளின் சூடு தணிவதற்குள் அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றது அனைவரையும் நெகிழ்வடையச் செய்தது.
ஸ்கூல் நடத்தும் திட்டம் இருக்கா? அங்கீகாரம் பெறுவது இனி ரொம்ப ஈஸி! முதல்வர் துவங்கி வைத்த புதிய வசதி
அதேநேரத்தில் இந்த உணர்வுப்பூர்வமான தருணத்தில், பாஜக தொண்டர்கள் ஜெய்ஸ்ரீராம் என முழக்கங்கள் எழுப்பி மமதா பானர்ஜியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தனர். இத்தகைய முழக்கங்கள் அங்கு சலசலப்பையும் ஏற்படுத்தி இருந்தது. பாஜகவினரின் இந்த கோஷங்களால் மேடையில் ஏறுவதற்கு மமதா பானர்ஜி மறுப்பு தெரிவித்துவிட்டார். மத்திய அமைச்சர், மேற்கு வங்க ஆளுநர் என பலரும் கேட்டுக் கொண்ட போதும் மமதா மைக்கில் பேச மட்டும்தான் செய்தார்; மேடை ஏறவே முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். மேற்கு வங்கத்தில் ஜெய்ஸ்ரீராம் என பாஜகவினர் எப்போது மமதாவை கிண்டலடிக்கும் வகையில் முழக்கமிடுவர். ஜெய்ஸ்ரீராமுக்கு பதிலாக ஜெய் காளி! என மமதாவும் திரிணாமுல் காங்கிரசாரும் முழக்கமிடுவது வழக்கம் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.