Truck on Train: ரயிலில் "பால் லாரிகள்" - அசத்திய குஜராத் பால் பண்ணை...பிரதமர் மோடி பாராட்டு
டெல்லி: பால் விநியோகத்தை விரைவாக்கவும் பால் கெட்டுப் போகாமல் இருக்கவும் ரயிலில் பால் லாரிகள் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்ட குஜராத் பால் பண்ணையின் "டிரக் ஆன் டிரெயின் Truck on Train" முயற்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தமது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று பேசியதாவது: பால்வளத் துறை நமது நாட்டின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாகும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இது நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதில் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது.

குஜராத் பனாஸ் பால் பண்ணை: சில நாட்களுக்கு முன்பு, குஜராத்தின் பனாஸ் பால்பண்ணையின் ஒரு சுவாரஸ்யமான முன்னெடுப்பைப் பற்றி அறிந்தேன். பனாஸ் பால்பண்ணை, ஆசியாவின் மிகப்பெரிய பால்பண்ணையாக கருதப்படுகிறது. இங்கு, தினமும் சராசரியாக, 75 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படுகிறது. இதையடுத்து, பிற மாநிலங்களுக்கும் இது அனுப்பப்படுகிறது. இதுவரை, டேங்கர் லாரிகள் அல்லது பால் ரயில்கள் பிற மாநிலங்களுக்கு சரியான நேரத்தில் பால் வழங்குவதை உறுதி செய்ய பயன்படுத்தப்பட்டன. ஆனால், சவால்கள் குறைந்தபாடில்லை. ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் நிறைய நேரம் ஆனது, சில நேரங்களில் பாலும் அதில் கெட்டுப் போனது.
டிரக் ஆன் டிரெயின்: இந்தச் சிக்கலை சமாளிக்க, இந்திய ரயில்வே ஒரு புதிய சோதனையை நடத்தியது. பாலன்பூரிலிருந்து நியூ ரேவாரி வரை, டிரக் ஆன் டிராக் வசதியை ரயில்வே அறிமுகப்படுத்தியது. இதில், பால் லாரிகள் நேரடியாக ரயிலில் ஏற்றப்படுகின்றன. அதாவது, போக்குவரத்துப் பிரச்சனைக்கு இதன் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. டிரக் ஆன்-டிராக் வசதியின் பலன்கள் மிகவும் திருப்திகரமாக உள்ளன. டெலிவரி செய்ய 30 மணி நேரம் எடுத்துக் கொண்ட பால், இப்போது பாதி நேரத்திற்குள் வந்து கொண்டிருக்கிறது. இது எரிபொருளால் ஏற்படும் மாசுபாட்டை அகற்றியுள்ள அதே வேளையில், எரிபொருள் செலவையும் மிச்சப்படுத்துகிறது. இதனால் லாரி ஓட்டுனர்கள் பெரிதும் பயனடைந்து, அவர்களின் வாழ்க்கையும் சுலபமாகியுள்ளது.

பால் பண்ணைகள்: கூட்டுமுயற்சியால் இன்று நமது பால்பண்ணைகளும் நவீன சிந்தனையுடன் முன்னேறி வருகின்றன. பனாஸ் பால்பண்ணை எவ்வாறு சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது, சாணவிதை உருண்டை மூலம் மரம் வளர்ப்புப் இயக்கம் வாயிலாகத் தெளிவாகிறது. வாராணசி பால் ஒன்றியம் நமது பால் பண்ணையாளர்களின் வருமானத்தை அதிகரிக்க, உர மேலாண்மை தொடர்பாகவும் செயல்பட்டு வருகிறது. கேரளாவின் மலபார் மில்க் யூனியன் பால்பண்ணையின் முயற்சியும் மிகவும் தனித்துவமானது. இது விலங்கு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஆயுர்வேத மருந்துகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது.

ராஜஸ்தான் கோட்டா பால் பண்ணை: ராஜஸ்தானத்தின் கோட்டாவில் பால் பண்ணை நடத்தி வரும் அமன்பிரீத் சிங் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பால்பண்ணையுடன் சாணஎரிவாயுவிலும் கவனம் செலுத்தி, இரண்டு சாண எரிவாயு கலன்களை அவர் அமைத்தார். இதனால் மின்சாரத்திற்கான செலவு சுமார் 70 சதவீதம் குறைந்துள்ளது. இந்த முயற்சி, நாடு முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிக்கும். இன்று, பல பெரிய பால் நிறுவனங்கள் சாண எரிவாயுவில் கவனம் செலுத்துகின்றன. இந்த வகையான சமூக உந்துதலால் மதிப்புக் கூட்டல் மிகவும் ஊக்கமளிக்கிறது. இதுபோன்ற போக்குகள் நாடு முழுவதும் தொடரும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications