ஈரான் - அமெரிக்கா போருக்கு நடுவே.. யுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு.. ஆலோசித்தது என்ன?
டெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார். மேற்கு ஆசிய நிலவரம், ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசித்துள்ளனர்.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் 18 நாள்களை தாண்டியுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் கடுமையாக தாக்கி வருகிறது.

போர் பதற்றம் அதிகரிப்பு
துபாய், பஹ்ரைன் உள்ளிட்ட பகுதிகளிலும் ஈரானின் தாக்குதல் தொடர்வதால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடுவதாக அறிவித்த ஈரான், அவ்வழியாக செல்லும் கப்பல்களை தாக்குவோம் என்று எச்சரித்தது. இதனால், சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரானை நிர்மூலமாக்குவோம் என்று டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், பதிலடி கொடுக்கவும் தயாராக இருப்பதாக ஈரான் கூறுவதால், வளைகுடாவில் போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர தணிந்தபாடில்லை. இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகம்மது பின் சையத் அல் நஹ்யானுடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
பேசப்பட்டது என்ன?
இந்த பேச்சுவார்த்தையின் போது, மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். வளைகுடா நாட்டின் மீது நடைபெற்ற அனைத்து தாக்குதல்களுக்கும் பிரதமர் மோடி தனது கண்டனத்தை தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுக்க இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படவும் இந்த பேச்சுவார்த்தையின் போது ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது முக்கியம் என்பதில் இரு தலைவர்களும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். ஐக்கிய அரபு அமீரக அதிபருடனான பேச்சு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:-
பிரதமர் மோடி ட்வீட்
ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேசினேன். அவருக்கு முன்கூட்டியே ஈத் வாழ்த்துகளை தெரிவித்தேன். மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை குறித்து பேசினோம்.மக்களின் உயிரிழப்புக்கும், பொதுமக்கள் பயன்பாட்டு கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டதற்கும் காரணமான அனைத்து தாக்குதல்களையும் இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. வளைகுடா பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications