86 நிமிட பட்ஜெட் உரை.. தொடர்ந்து மேஜையை தட்டி வரவேற்ற பிரதமர் மோடி.. எத்தனை முறை தெரியுமா? ஆஹா!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 86 நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த வேளையில் பிரதமர் மோடி பட்ஜெட்டை வரவேற்கும் வகையில் மேஜையை தட்டி வரவேற்றார். பிரதமர் மோடி எத்தனை முறை மேஜையை தட்டினார் என்ற தகவல
டெல்லி: 2023-2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அவர் மொத்தம் 86 நிமிடங்கள் வரை பட்ஜெட் உரையை வாசித்தார். நிர்மலா சீதாராமன் நேற்று தனது 5வது பட்ஜெட்டை தொடர்ந்து தாக்கல் செய்த நிலையில் இதுதான் அவரது குறுகிய பட்ஜெட் உரையாகும். இந்நிலையில் தான் நேற்றைய பட்ஜெட் உரையை பிரதமர் மோடி உற்சாகமாக மேஜையை தட்டி வரவேற்றார். அவர் எத்தனை முறை மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தார் என்ற சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
2023-2024ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த 2 ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் வெளியாகின. மேலும் புதிய வருமான வரி முறையை பின்பற்றும் நபர்களின் வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி வரவேற்பு
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பட்ஜெட்டை பாராட்டி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்துதெரிவிக்கையில், ‛‛வலுவான இந்தியாவை கட்டமைக்க இந்த பட்ஜெட் சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளது. புதிய இந்தியாவை கட்டமைப்பதில் இந்த பட்ஜெட் பெரும் பங்காற்றும். அனைத்து துறை எதிர்பார்ப்புகளையும் இந்த பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது'' என தெரிவித்து இருந்தார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
மாறாக எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு எந்த திட்டங்களும், அறிவிப்புகளும் இல்லை என சாடி வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இது பட்ஜெட்டே இல்லை என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
86 நிமிட உரை
இந்நிலையில் தான் தற்போது பட்ஜெட் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. நேற்றைய பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் 86 நிமிடங்கள் வாசித்தார். நிர்மலா சீதாராமன் நேற்று தனது 5வது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இது தான் அவரது குறைந்த நேர உரையாகும். கடந்த ஆண்டு 92 நிமிடங்களும், 2021ல் 1 மணி நேரம் 50 நிமிடங்களும், 2020ல் 2 மணிநேரம் 40 நிமிடங்களும் உரையாற்றினார். 2020ல் அவர் ஆற்றிய பட்ஜெட் உரை தான் மிக நீண்ட பட்ஜெட் உரையாக உள்ளது. இருப்பினும் நேற்று நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை வெறும் 86 நிமிடங்களில் முடித்து கொண்டார்.
124 முறை மேஜையை தட்டிய மோடி
இந்நிலையில் நேற்று பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் வேகமாக முடித்து கொண்டாலும் கூட அவருக்கு பாஜக எம்பிக்கள் வழக்கம்போல் நல்ல முறையில் வரவேற்பு அளித்தனர். ஒவ்வொரு முக்கிய அறிவிப்பு, திட்டங்களை நிர்மலா சீதாராமன் கூறியபோதும் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் மேஜைகளை தட்டி பாராட்டினார். குறிப்பாக பிரதமர் மோடியும் தனது மேஜையை தட்டி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்தார். அதன்படி நேற்று நிர்மலா சீதாராமன் 86 நிமிடங்கள் பட்ஜெட் உரையாற்றிய நிலையில் பிரதமர் மோடி 124 முறை மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்துள்ளார் என்ற சுவாரசிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.