ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிச் சுற்று- நாளை பிரதமர் மோடி உரை-10,000 மாணவர்களுடன் உரையாடல்
டெல்லி: ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-ன் இறுதிச் சுற்றில் பிரதமர் மோடி நாளை உரையாற்ற உள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நமது அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சில சிக்கல்களுக்குத் தீர்வுகாண, மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய நாடுதழுவிய ஒரு ஏற்பாடாக இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நடத்தப்படுவதுடன், புதுமையான பொருட்களைக் கண்டுபிடிக்கும் கலாச்சாரத்தை கற்பிக்கும் விதமாகவும், சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் மனநிலையை உருவாக்கும் நோக்கத்துடனும் நடத்தப்படுகிறது.
இளைஞர்களின் மனதில், சிந்திக்கும் திறனை ஏற்படுத்துவதில் இந்தப் போட்டி மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது. 2017-ல் நடத்தப்பட்ட முதலாவது ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் 42,000 மாணவர்கள் பங்கேற்றனர்.
இது 2018-ல் 1 லட்சம் பேராகவும், 2019-ல் 2 லட்சமாகவும் அதிகரித்தது. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-ன் முதல் சுற்றில், 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
கொரோனா, புதிய கல்வி கொள்கை- பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணிக்கு மக்களிடம் உரையாற்றுகிறார்
இந்த ஆண்டுக்கான மென்பொருள் பிரிவினருக்கான மாபெரும் இறுதிப்போட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து போட்டியாளர்களும் ஆன்லைன் வாயிலாக பங்கேற்கும் விதமாக, அதற்கென உருவாக்கப்பட்ட அதிநவீன சிறப்பு அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 37 துறைகள், 17 மாநில அரசுகள் மற்றும் 20 தொழில் நிறுவனங்கள் கொடுத்துள்ள 243 பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான போட்டியில், 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். நாளை நடைபெறும் இறுதிச் சுற்றில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுவதுடன் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். இவ்வாறு மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.