அரசு திட்டங்கள் மூலம் லட்சாதிபதியான ஏழைகள்.. மக்களவையில் மோடி பேச்சு
டெல்லி: அரசு திட்டங்கள் மூலம் ஏழைகள் சொந்த வீடு கட்சி லட்சாதிபதியாகியுள்ளனர் என மக்களவையில் ஜனாபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற இரு சபைகளிலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
இதனையடுத்து பிப்ரவரி 1-ந் தேதி நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
இத்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் காரமசாரமாக பேசினர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு பெரும் கவனத்தை ஈர்த்தது. மத்தியில் ஆளும் பாஜக அரசை மிக கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம்; இந்த கூட்டாட்சி கட்டமைப்பை பாஜக சீர்குலைக்கிறது. மாநிலங்களின் கலாசாரங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. பாஜகவால் தமிழகத்தை வாழ்நாளில் ஒருபோதும் ஆட்சி செய்யவே முடியாது என பேசியது பெரும் வரவேற்பையும் பெற்றது.
பஞ்சாப்பில் சரண்ஜித் சிங்கை டிக் அடித்த காங்கிரஸ்.. டிஜிட்டல் பிரச்சாரத்தை துவங்கிய ராகுல் காந்தி!
இந்நிலையில் லோக்சபாவில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில் மத்திய அரசின் திட்டங்களால் ஏழைகள் லட்சாதிபதியாக உயர்ந்துள்ளனர். அரசின் திட்டங்கள் மூலம் மக்கள் வீடுகட்டி லட்சாதிபதியாக வாழ்கின்றனர். ஏழைத்தாய்கள் இலவச சமையல் எரிவாயு மூலம் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏழை மக்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் சென்று சேருகிறது. பலர் இன்னும் 2014ஆம் ஆண்டிலேயே பின்தங்கியுள்ளனர் என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.