நாளை மாலத்தீவு செல்கிறார் பிரதமர் மோடி... முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு
டெல்லி: தெற்காசிய நாடான மாலத்தீவுக்கு நாளை பிரதமர் மோடி அரசு முறை பயணமாக செல்கிறார். அங்கு இருதரப்பு உறவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாலத்தீவு அதிபர் இப்ராகீம் சாலிகுடன் பிரதமர் பேச்சு நடத்துகிறார்.
சமீபத்தில் மாலத்தீவில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக அங்கு சீனாவின் கை ஓங்கும் வகையில் இருந்தது. ஆனால், அங்கு நினைத்தப்படி இல்லாமல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் மோடி அங்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையிலான முதல் சுற்றுப் பயணம் இதுவாகும். கடந்த ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபர் இப்ராகீம் சோலி பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.
எனினும் அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை. தற்போது மேற்கொள்ளும் பயணத்தின் போது இரு நாடுகளுக்கிடையே சில துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்றதில் இருந்து 44 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் நரேந்திர மோடி. இந்த பயணத்தின் போது, முக்கிய நாடுகளுடன் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதில், முதன் முறையாக, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்ஜியேல் வாங்சங்கின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி. அப்போது, இந்தியாவிலிருந்து பூடானுக்கு பால் பவுடர், கோதுமை, சமையல் எண்ணெய், தானியங்கள், அரிசி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கான விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தநிலையில், இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, தனது முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு நாட்டுக்கு செல்ல உள்ளார். மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் செல்கிறார்.
இலங்கையில், இந்தியா மேற்கொண்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் பிரதமர் மோடி ஆய்வு செய்வார் என கூறப்படுகிறது. சீனா ஆதிக்கம் செலுத்த நினைக்கும் நிலையில், மோடி நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்துவது, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications