கார்கில் விஜய் திவாஸ் 2024: திராஸ் போர் நினைவிடத்தில் இன்று வீரவணக்கம் செலுத்துகிறார் பிரதமர் மோடி!
டெல்லி: 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்று கடமையின் போது மிக உயரிய தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவார். மேலும் ஷின்குன் லா சுரங்கப்பாதைத் திட்டத்தை பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸில் தொடங்கிவைப்பார்.
1999-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் எல்லையான கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சித்தது. ஆனால் நமது ராணுவ வீரர்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடித்தனர். 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்த இந்த கார்கில் யுத்தத்தில் நமது ராணுவத்தின் 527 மாவீரர்கள் வீர மரணத்தைத் தழுவினர். 1,363 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். ஆக்கிரமிக்க முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 4,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இந்திய வரலாற்றின் வீரம் செறிந்த கார்கில் யுத்தத்தின் 25-வது வெற்றி தினம் இன்று. கார்கில் வெற்றி தினம் கார்கில் விஜய் திவாஸ் என கொண்டாடப்பட்டு வருகிறது.
25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, இன்று கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்று கடமையின் போது மிக உயரிய தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறார்.
மேலும் ஷின்குன் லா சுரங்கப்பாதைத் திட்டத்தை பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கிவைப்பார். ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டம் 4.1 கி.மீ நீளமுள்ள இரட்டை-குழாய் சுரங்கப்பாதையைக் கொண்டுள்ளது, இது லே-க்கு அனைத்து பருவ காலத்திலும் இணைப்பை வழங்குவதற்காக நிமு - படும் - தர்ச்சா சாலையில் சுமார் 15,800 அடி உயரத்தில் கட்டப்படும். இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டால், இது உலகின் மிக உயரமான சுரங்கப்பாதையாக இருக்கும். ஷின்குன் லா சுரங்கப்பாதை நமது ஆயுதப் படைகள் மற்றும் தளவாடங்களின் விரைவான போக்குவரத்தை உறுதி செய்வதுடன் மட்டுமல்லாமல், லடாக்கில் பொருளாதார, சமூக வளர்ச்சியையும் வளர்க்கும்.
முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான்: 25-வது கார்கில் வெற்றி தினம் தொடர்பாக தளபதி ஜெனரல் அனில் சவுகான் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், கார்கில் போரில் துணிச்சலான வீரர்கள் செய்த உயர்ந்த தியாகங்கள் வீணாகாது என்று சுட்டிக்காட்டியுள்ளார். இது ராணுவ வீரர்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்கும், இளைஞர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
#WATCH | Dras, Ladakh: Preparation visuals from the Kargil War Memorial ahead of Prime Minister Narendra Modi's visit today on the occasion of the 25th Kargil Vijay Diwas.
— ANI (@ANI) July 26, 2024
PM Modi will pay tribute to the heroes of the Kargil War https://t.co/6KVshdjRhv pic.twitter.com/QtShWHEElS
கார்கில் போரின் தனித்துவத்தை எடுத்துரைத்துள்ள முப்படைத் தளபதி, இந்தப் போர் ராணுவத்திற்கு மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய அனைவருக்குமான பாடங்களாக இருந்தது என்று கூறினார். ரத்தம் சிந்தியதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை மறக்கக் கூடாது என்றும், மீண்டும் தவறுகளை செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
ஆயுதப் படைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்து குறிப்பிட்டுள்ள ஜெனரல் அனில் சவுகான், முப்படைகளில் பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். போரிடும் திறனை மேம்படுத்துதல், எந்நேரத்திலும் ஆயுதப்படையினரை போருக்கு தயாராக வைத்திருத்தல் ஆகியவை இந்த சீர்திருத்தங்கள் ஆகும் என்று ஜெனரல் அனில் சௌகான் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications