பண மோசடி தடுப்பு சட்ட தீர்ப்புக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் அப்பீல்- மத்திய அரசுக்கு நோட்டீஸ்
டெல்லி: பண மோசடி தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது உள்ளிட்ட சரத்துகளை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு செய்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டில் பண மோசடி தடுப்பு சட்டமானது 2002-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தில் பல்வேறு அம்சங்கள், சரத்துகள் அடுத்தடுத்து சேர்க்கப்பட்டன. பண மோசடியில் ஈடுபட்டவர்களை இந்த சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்ய அதிகாரம் வழங்குவதும் இதில் உள்ள ஒரு சரத்தாகும்.

பண மோசடி தடுப்பு சட்டத்தில் அமலாக்கத்துறைக்கான அதிகாரங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்ட பலர் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரம் செல்லும். இச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்; சொத்துகளை பறிமுதல் செய்யலாம் என அதிரடி தீர்ப்பு வழங்கியது.
மேலும் இந்த மோசடியில் ஈடுபடுவோரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்வது என்பது தனிப்பட்ட ஒரு நடவடிக்கை என கருத முடியாது. அத்துடன் பண மோசடி தடுப்புச் சட்ட முறைகேடுகள் தொடர்பான புகார்களை குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் காண்பிக்க வேண்டிய அவசியமும் இல்லை. 2002 சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முந்தைய வழக்குகளிலும் கூட அமலாக்கப் பிரிவு நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரம் இருக்கிறது என்றது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தமது அப்பீல் மனுவில், இச்சட்டத்தில் 2015, 2016, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சரி என்கிறது உச்சநீதிமன்றம். ஆனால் இச்சட்டத்தின் கீழான வழக்கு எது? எவை எவை இச்சட்டத்தின் கீழ் வரும் என்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் பெஞ்சுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் அந்த 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் கடந்த மாதம் அளித்த தீர்ப்பின் சில சரத்துகளை ஆய்வு செய்யவும் உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது.












Click it and Unblock the Notifications