இத்தாலியில் சொகுசு வீடு.. 1.3 கிலோ தங்கம்.. சோனியா காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி தாக்கல் செய்துள்ள ராஜ்யசபா தேர்தல் வேட்புமனுவில் அவர் தனது சொத்து மதிப்புகளையும் தாக்கல் செய்துள்ளார். அது குறித்து நாம் பார்க்கலாம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வழக்கமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் தான் போட்டியிடுவார். ஆனால், இந்த முறை முதல்முறையாக அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் ராஜ்யசபா தேர்தல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வருகிறார்.

ராஜஸ்தானில் இருந்து அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் கடந்த பிப். 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
சோனியா காந்தி: லோக்சபா தேர்தலில் வென்று ஏழு முறை நாடாளுமன்றத்திற்குச் சென்ற சோனியா காந்தி, முதல்முறையாக ராஜ்யசபாவுக்கு செல்கிறார். தான் எதற்காக லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை விளக்கும் வகையில் சோனியா காந்தி ரேபரேலி மக்களுக்குச் சோனியா கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் அவர் தனது உடல்நிலை மற்றும் வயது காரணமாகவே லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க அவர் ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியிட இருக்கிறார். இதற்கிடையே அவரது வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட அவரது பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ள சொத்து மற்றும் நிதி விவரங்கள் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
சொத்து மதிப்பு: சோனியா காந்தியிடம் இப்போது ரொக்கமாக ரூ.90,000 உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 12.53 கோடி என்று அவரது பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் உள்ள அனைத்து அசையும் மற்றும் அசையாத சொத்துகளின் மதிப்பு இதுவாகும்.. கடந்த பல ஆண்டுகளாகவே சோனியா காந்தியின் சொத்து மதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 9.28 கோடியாக இருந்தது. இது கடந்த 2019இல் 11.82 கோடியாக அதிகரித்த நிலையில், இப்போது 2024இல் அது ரூ.12.53 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அவரது சொத்து மதிப்பு 27.59% அதிகரித்த நிலையில், 2019- 2024 காலகட்டத்தில் சுமார் 5.8% அதிகரித்துள்ளது. அதேநேரம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 2009 -2014க்கு இடைப்பட்ட காலத்தில் அவரது சொத்து மதிப்பு 574.18%. அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கம்: சோனியா காந்தியிடம் இருக்கும் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 6.38 கோடியாக இருக்கிறது. இதில் நகைகள், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ராயல்டி, முதலீடுகள், முதலீட்டுப் பத்திரங்கள், வங்கி வைப்புத்தொகை மற்றும் ரொக்கம் ஆகியவை அடக்கம்.. குறிப்பாக அவரிடம் உள்ள நகைகளின் மதிப்பு மட்டும் ரூ. 1.07 கோடி ஆகும், ரூ.49.95 லட்சம் மதிப்பிலான 1.3 கிலோ தங்கம், மற்றும் ரூ.57.2 லட்சம் மதிப்பிலான 88 கிலோ வெள்ளி அவரிடம் உள்ளது.
இத்தாலி வீடு: சோனியா காந்திக்கு இத்தாலி நாட்டை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கே இத்தாலி நாட்டிலும் சோனியா காந்திக்குப் பரம்பரை சொத்துக்களில் பங்கு இருக்கிறது. அங்குள்ள இவரது சொத்து மதிப்பு தற்போது ரூ. 26.83 லட்சமாக உள்ளதாகப் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2014இல் இத்தாலி சொத்து மதிப்பு ரூ.19.9 லட்சமாக இருந்த நிலையில், இப்போது அது ரூ.26 லட்சமாக அதிகரித்துள்ளது. 2019 லோக்சபா தேர்தலில் தனது இத்தாலி சொத்தின் மதிப்பை அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வருமானம்: அதேபோல சோனியா காந்தி தனக்கு எந்த வழிகளில் வருமானம் கிடைக்கிறது என்பதையும் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். எம்பி சம்பளம், ராயல்டி வருமானம், வங்கிகளின் வட்டி, டிவிடண்ட்கள், மியூச்சுவல் ஃபண்ட்கள் மூலம் தான் அவருக்குப் பெருமளவு வருமானம் வருகிறது. சோனியா தனது கல்வித் தகுதிகளையும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அவர் 1964 இல் சியனாவில் உள்ள இஸ்டிடுடோ சாண்டா தெரசாவில் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழியில் மூன்றாண்டு படிப்பை முடித்துள்ளார். 1965இல் கேம்பிரிட்ஜில் உள்ள லெனாக்ஸ் குக் பள்ளியில் ஆங்கிலத்தில் ஒரு கோர்ஸையும் படித்துள்ளார்.
இந்த நவீன டிஜிட்டல் உலகத்திலும் சோனியா காந்தி சமூக வலைத்தளங்களில் இருந்து தள்ளியே இருக்கிறார். தனக்கு சமூக வலைத்தளங்களில் கணக்குகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் என எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் அவர் இல்லை.












Click it and Unblock the Notifications