"எல்லாம் சரி.. ஆனால் அந்த ஒன்னு மட்டும் இடிக்குதே!" காங்கிரஸில் பிகே? இடையில் இருக்கும் ஒரே சிக்கல்
டெல்லி: பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைமை உடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துணர்ச்சி அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்த தலைவர்களே வலியுறுத்தத் தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக, 2022 சட்டசபைத் தேர்தல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், இந்த கோரிக்கை மேலும் அதிகரித்தது. இது காங்கிரஸ் தலைமை மீதான அழுத்தத்தை அதிகரித்தது.

காங்கிரஸ்
இந்தச் சூழலில் தான் சமீபத்தில் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியைச் சந்தித்து இருந்தார். காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது குறித்தும் அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த திட்டங்களை முன்மொழிந்துள்ளார். இது தொடர்பாக அவர் 3 நாட்களில் இரு முறை காங்கிரஸ் தலைமையைச் சந்தித்தார். பிகே முன்மொழிந்துள்ள திட்டம் குறித்து காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. பிகே திட்டம் பற்றி ஆலோசிக்கச் சிறப்புக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது.

கிட்டதட்ட உறுதி
கடந்த ஆண்டு காங்கிரஸில் இணையும் முயற்சி பிரசாந்த் கிஷோருக்கு தோல்வியைக் கொடுத்துள்ள போதிலும், இந்த ஆண்டு அவர் அதில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் என்றே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிகே காங்கிரஸ் கட்சியில் சேர்வது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அவருக்கு முக்கிய பதவி அளிக்கப்படலாம் என்றும் அவருக்கான அதிகாரத்தை ராகுல் காந்தியுடன் கலந்தாலோசித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரையறுப்பார் என்றும் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே கோரிக்கை
அதேநேரம் பிகே திட்டம் குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழு ஒன்றை முன்வைத்துள்ளது. அதாவது பிகே மற்ற அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. மேற்கு வங்கம், ஆந்திரா மாநிலங்களில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றி, அவர்கள் வெற்றிகளைப் பெற உதவினார்கள். இருப்பினும், இனி இப்படிப் பிற கட்சிகளுடன் பணியாற்றக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.

எதிர்ப்பு இல்லை
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியில் பலருக்கும் பிகே மீது இந்த டவுட் இருக்கவே செய்கிறது. அவர் தேசிய அளவில் மிகவும் ஆர்வமாக உள்ளார் என்றும் ஒரு கட்சி உடன் அவர் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியில் பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியில் பிகே இணைவதை யாரும் எதிர்க்கவில்லை என்றாலும் கூட இந்த சந்தேகம் பலருக்கும் இருக்கவே செய்கிறது.

திக்விஜய் சிங்
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், "அவர் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி உள்ளார். காங்கிரஸ் மிகப் பெரிய கட்சி. இங்கு அவர் மீது சில சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில், நாங்கள் திறந்த மனதுடனேயே அவரை அணுகுகிறோம். அவர் கட்சியில் இணைய யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் சோனியா காந்தி மட்டுமே இறுதி முடிவை எடுப்பார்" என்றே கூறி இருந்தார்.

சாத்தியமானது
பிகே கடந்த ஆண்டே காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்திருந்தார். காங்கிரஸ் கட்சியை ஆய்வு செய்து அதில் உள்ள சிக்கல்களை முன்வைத்து இருந்தார். பிகேவின் இந்தத் திட்டம் வெளிப்படையாக முன்மொழியப்படவில்லை என்றாலும் கூட அக்கட்சியின் மூத்த தலைவர்களிடம் இத்திட்டம் விளக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மூத்த தலைவர்கள் பிகேவின் திட்டம் சாத்தியமானது என்றே கருதுகின்றனர். அதேநேரம் இந்த விவகாரத்தில் சோனியா காந்தியே இறுதி முடிவை எடுக்க உள்ளார்.

பிகே திட்டம் என்ன
பிகே காங்கிரஸ் தலைமைக்கு முன்வைத்த திட்டத்தில் "காங்கிரஸ் அதன் சாதனைகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது. அதேபோல காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு பலவீனங்கள் மற்றும் மக்களுடன் தொடர்பு இல்லாதது தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பத் திட்டம் தேவை. காங்கிரஸ் தலைவராகச் சோனியா காந்தி இருக்கும் அதேநேரம் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் செயல் தலைவர் அல்லது துணைத் தலைவராக இருக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தியை நாடாளுமன்ற வாரிய தலைவராக இருக்கலாம்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications