'அவுக’ என்.டி.ஆர். ரூ.100 நாணயம் வெளியிட ‘இவுக’ நன்றி சொல்ல.. கலகலக்கும் ஆந்திரா, தெலுங்கானா தேர்தல்!
டெல்லி: தெலுங்கானா, ஆந்திரா தேர்தல்கள் நடைபெறும் நிலையில் தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனரும் மறைந்த முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ் நினைவாக ரூ.100 நாணயத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வெளியிட்டார்.
தெலுங்கானா சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திரா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெறும்.

ஆந்திரா, தெலுங்கானா தேர்தல்கள் இரு மாநிலங்களிலும் இப்போதே களைகட்டி இருக்கிறது. இரு மாநிலங்களிலும் பாஜக 'காலூன்றும்' முயற்சியில்தான் இருக்கிறது.
இந்நிலையில் ஆந்திரா, தெலுங்கானா மக்களின் மகத்தான தலைவர் மறைந்த என்.டி.ராமாராவின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது: மறைந்த என்.டி.ராமாராவ், தெலுங்கு திரைப்படங்கள் மூலம் இந்திய திரைப்படத் துறையையும், கலாச்சாரத்தையும் வளப்படுத்தியுள்ளார். ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு தனது நடிப்பின் மூலம் அவர் உயிர் கொடுத்தார். அவர் நடித்த ராமர் மற்றும் கிருஷ்ணர் கதாபாத்திரங்கள் மிகவும் உயிர்ப்புடன் இருந்ததால் மக்கள் என்.டி.ஆரை வணங்கத் தொடங்கினர். என்.டி.ஆரும் தனது நடிப்பின் மூலம் சாமானிய மக்களின் வலியை வெளிப்படுத்தினார். அனைத்து மனிதர்களும் சமம் என்ற தனது 'மனுசுலந்தா ஒக்கதே' படத்தின் மூலம் சமூக நீதி மற்றும் சமத்துவம் குறித்த செய்தியை பரப்பினார்.

ஒரு பொது சேவகராகவும், தலைவராகவும் என்.டி.ஆரின் புகழ், சமமாக பரந்து விரிந்துள்ளது. தனது அசாதாரண ஆளுமை மற்றும் கடின உழைப்பின் மூலம் இந்திய அரசியலில் ஒரு தனித்துவமான அத்தியாயத்தை உருவாக்கினார். பல மக்கள் நலத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார், அவை இன்று வரை நினைவில் உள்ளன.
என்.டி.ஆரை போற்றும் வகையில் நினைவு நாணயத்தை அறிமுகப்படுத்தியத நிதி அமைச்சகத்துக்கு பாராட்டுகள். அவரது தனித்துவமான ஆளுமை, எப்போதும் மக்களின் இதயங்களில், குறிப்பாக தெலுங்கு பேசும் மக்களின் இதயங்களில் பதிந்திருக்கும். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார். இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமது குடும்பத்தினருடன் பங்கேற்றார்.

இந்த நிகழ்வுக்கு தம்மை அழைக்கவில்லை என என்.டி.ராமாராவின் துணைவியார் லட்சுமி பார்வதி புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் அவர் கடிதம் அனுப்பி இருந்தார்.
இதனிடையே என்.டி.ஆர். உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டதற்காக மத்திய பாஜக அரசுக்கு தெலுங்குதேசம் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்தார். மேலும் என்.டி.ஆர் நாணய வெளியீட்டு நிகழ்வை திருவிழா போல ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்குதேசம் தொண்டர்கள் இன்று கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications