வார்த்தைகளால் சொல்ல முடியாத துக்கம்! தஞ்சை தேர் விபத்து குறித்து குடியரசுத் தலைவர் வேதனை பதிவு
டெல்லி: தஞ்சாவூர் தேர் விபத்தில் சிறுவர்கள் சிக்கி உயிரிழந்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம் என ட்விட்டரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது களிமேடு கிராமம். இங்குள்ள அப்பர் மடத்தின் கோயிலில் ஆண்டுதோறும் அப்பர் பிறந்த சதய நட்சத்திர தினத்தன்று சித்திரை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று காலை திருவிழா தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக நேற்றிரவு 10 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது.
ரூ.2 லட்சம் நிவாரணம் - தஞ்சாவூர் தேர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்
தேர் திருவிழா
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 10 அடி உயரம் தொண்ட பல்லக்கு தேரில் அப்பர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். இந்த தேரை திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெரியவர்கள் ஏன ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரை சுற்றிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக சென்றனர்.
விபத்து நடந்தது எப்படி?
தேரில் அலங்கார மின் விளக்குகள் ஒளிர்வதற்காக வேண்டி ஜெனரேட்டர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே தேரை அப்பர் மடத்திற்கு கொண்டு செல்வதற்காக பக்தர்கள் சாலை வளைவில் இழுத்துள்ளனர். அப்போது அங்கிருந்த பள்ளத்தில் தேரின் ராட்சத சக்கரம் இறங்கியது. அந்த இடத்தின் மேல் சென்ற உயர் அழுத்த மின் கம்பி தேரில் உரசியது.
11 பேர் உயிரிழப்பு
இதனால் தேரில் பாய்ந்த மின்சாரம் அதனை பிடித்திருந்த பக்தர்களை தாக்கியது. தேர் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் மோகன் (22), பிரதாப் (36), ராகவன் (24), தந்தை அன்பழகன் (60), நாகராஜ் (60), சந்தோஷ் (15), செல்வம் (56), ராஜ்குமார் (14), சுவாமிநாதன் (56), கோவிந்தராஜ் (45), பரணிதரன் (13) ஆகிய 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
பிரதமர், முதலமைச்சர் நிவாரணம்,
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Recommended Video
ராம்நாத் கோவிந்த் இரங்கல்
இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "தஞ்சாவூர் தேர் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் உட்பட பல உயிர்கள் பலியான சோகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்." எனக் குறிப்பிட்டு உள்ளார்.