'விரைவில் நலம் பெறுங்கள் ராகுல்'.. பிரதமர் மோடி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
டெல்லி: ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் ட்வீட் செய்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது உச்சத்தில் உள்ளது. நாட்டில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேநேரம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கொரோனா பரவல் மிக மோசமாக உள்ளது. நாட்டின் முக்கிய நபர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் ராகுல்காந்தி விரைவில் நலம்பெற வேண்டும் எனப் பிரதமர் மோடி, ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ட்வீட் செய்துள்ளனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மக்களவை எம்பி ராகுல் காந்தி விரைவாக கொரோனாவில் இருந்து குணமடைய வேண்டும். அவர் சீக்கிரம் உடல் ஆரோக்யத்திம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.
அதேபோல திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை அறிந்து ஆழ்ந்த கவலை கொண்டேன். அவர் விரைவில் குணமடைந்து முழு நலம் பெற வாழ்த்துகிறேன். அனைவரும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டுள்ளார். இதேபோல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம், பாஜகவின குஷ்பு, ஸ்மிதி இராணி உள்ளிட்ட பலரும், ராகுல் விரைவில் குணமடைய வேண்டும் என ட்வீட் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications