2023 ஏப்ரல் முதல் தனியார் ரயில்கள் ஓடும்.. விமானங்களுக்கு இணையான கட்டணம்.. ரயில்வே
டெல்லி: வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டில் தனியார் ரயில் இயக்கப்படும் என்றும், இந்த ரயில்களில் டிக்கெட் கட்டணம், அந்த வழிகளில் இயக்கப்படும் விமான கட்டணத்துக்கு இணையாக இருக்கும் என்றும் என்று ரயில்வே வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 109 வழித்தடங்களில் 151 ரயில்களை தனியார் இயக்குவதற்கு தகுதி தேர்வுக்கான ரயில்வே வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்பு ரயில்களை இயக்குவதற்காக ஆர்.கே.கேட்டரிங், அதானி போர்ட்ஸ், மேக் மை ட்ரிப், இண்டிகோ ஏர்லைன்ஸ், விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட் ஆகியவை விருப்பம் தெரிவித்து இருந்தன.
இதேபோல் அல்ஸ்டாம் ட்ரான்ஸ்போர்ட், பாம்பாரிடார், சீமன்ஸ் ஏஜி, மெக்குவாரி ஆகிய சர்வதேச நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்தன.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் புதிய ரயில் பாலம் விறுவிறுப்பு - தலைமுறைகளை தாண்டி வரலாறு பேசும்
தனியாருக்கு அழைப்பு
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சுமார் 3 மாதங்களுக்கு மேல் பாதித்த நிலையில் திட்டம் இப்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. நாட்டில் உள்ள 109 வழித்தடங்களில் 151 நவீன ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டத்தில் தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பம் செய்வதற்கான பணிகளை ரயில்வே அமைச்சகம் தொடங்கி உள்ளது. இந்த திட்டம் மூலம் அரசுக்கு 35 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகள் ரயில் சேவை
இந்நிலையில் இது தொடர்பாக ஆன்லைனில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ், ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்கள் பயணிகள் ரயில் சேவையை தொடங்குவதன் மூலம் நல்ல தொழில் நுட்பத்துடன் கூடிய அதி விரைவான சேவை மக்களுக்கு கிடைக்கும்.
ரயில்கள் பராமரிப்பு
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் ரயில் பெட்டிகளை 40000 கிலோ மீட்டர் பயண தூரத்துக்கு பிறகு அதாவது மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை பராமரித்தால் போதுமானது. ஆனால் தற்போதைய ரயில் பெட்டிகளை 4000 கிமீ தூரம் பயணித்த உடன் பராமரிக்க வேண்டியது உள்ளது. தற்போது இயக்கப்படும் 2800 மெயில்கள், எக்ஸ்பிரஸ்களில் இருந்து 5 சதவீதம் ரயில்கள் மட்டுமே தனியாருக்கு ஒதுக்கப்படும். இந்த ரயில்களை தனியார்களே பராமரித்து கொள்ள வேண்டும்.
தனியார் ரயில்கள் இயக்கம்
வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் முதல் தனியார் ரயில்கள் இந்தியாவில் இயங்க அனுமதிக்கப்படும். இதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த ரயில்களுக்கான கட்டணம் விமானம் மற்றும் போக்குவரத்துக்கு இணையாக இருக்கும். தனியார் ரயில்களை அனுமதிப்பதன் மூலம் காத்திருப்போர் பட்டியல் கணிசமாக குறையும் . எந்தெந்த வழிகளில் ரயில்கள் தேவையோ அதற்கு ஏற்ப ரயில்கள் இயக்கப்படும்" இவ்வாறு கூறினார்.
எங்கே இயக்கப்படுகிறது
தற்போதைய நிலையில் தனியார் நிறுவமான ஐஆர்சிடிசிக்கு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதியளித்தது. அதன்படி, லக்னோ-டெல்லி தேஜாஸ் எக்ஸ்பிரஸ், வாரணாசி-இந்தூர் வழியாக தி காசி மகால் எக்ஸ்பிரஸ், அகமதாபாத்-மும்பை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களை ஐஆர்சிடிசி இயக்கி வருகிறது.