“மேற்கு வங்கத்தில் தேர்தல் வருவதால்.. வந்தே மாதரம் பாடலை பாஜக கையில் எடுத்துள்ளது”-பிரியங்கா காந்தி
டெல்லி: மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், வந்தே மாதரம் பாடல் விஷயத்தை பாஜக மீண்டும் கையில் எடுத்திருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி விமர்சித்திருக்கிறார்.
மக்களவையில் பேசிய அவர், "வந்தே மாதரம் பாடல் எப்பொழுதும் எங்களுக்குப் பிரியமானது, எப்பொழுதும் புனிதமானது, இனியும் புனிதமாகவே இருக்கும். மோடி அரசு நாட்டின் கவனத்தை பொதுமக்களைப் பாதிக்கும் அத்தியாவசியப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப விரும்புகிறது. மக்கள் ஆழ்ந்து மதிக்கும் ஒரு தேசியப் பாடல் குறித்து இவ்வளவு பெரிய விவாதம் எதற்கு?

இன்று நாடாளுமன்றத்தில் இது குறித்து நடக்கும் விவாதங்களுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் தேர்தல்கள். இச்சூழலில், நமது பிரதமர் தனது பங்கை நிலைநாட்ட விரும்புகிறார். இரண்டாவதாக, இந்த அரசு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் நாட்டிற்காக தியாகம் செய்தவர்களுக்கும் எதிராக புதிய குற்றச்சாட்டுகளை முன்வைக்க ஒரு வழியை தேடுகிறது. இது பொது மக்களின் முக்கியப் பிரச்சனைகளில் இருந்து நாட்டின் கவனத்தைத் திசை திருப்பும் செயலாகும்.
பாஜக ஈவன்ட் மேனேஜ்மென்ட் விஷயத்தை மிகச் சிறப்பாக செய்கிறது. வந்தே மாதரம் பத்திகள் குறித்த முடிவுகளை ஏற்க மறுப்பது, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களுக்கும் சுதந்திரப் போராட்டத் தலைவர்களுக்கும் இழைக்கப்படும் அவமானத்திற்குச் சமம். நீங்கள் தேர்தலுக்காக இருக்கிறீர்கள், நாங்கள் நாட்டிற்காக இருக்கிறோம். எத்தனை தேர்தல்களில் நாங்கள் தோற்றாலும், நாங்கள் இங்கேயே இருந்து உங்களையும் உங்கள் சித்தாந்தத்தையும் எதிர்த்துப் போராடுவோம். எங்கள் நாட்டிற்காகத் தொடர்ந்து போராடுவோம். எங்களை உங்களால் தடுக்க முடியாது.
பிரதமர் நரேந்திர மோடி நல்ல உரைகளை நிகழ்த்துகிறார். ஆனால், உண்மைத் தகவல்களின் அடிப்படையில் அவர் பலவீனமானவர். மோடிஜி பொதுமக்களிடம் உண்மைகளை முன்வைக்கும் விதம் அவரது கலை. ஆனால் நான் மக்களின் பிரதிநிதி - நான் ஒரு கலைஞன் அல்ல. நேரு சுபாஷ் சந்திர போஸுக்கு வந்தே மாதரம் குறித்து எழுதிய கடிதத்தை பிரதமர் மோடி சரியாகச் சூழல் அமைத்து விளக்கவில்லை என்றும், அது தொடர்பான முழுமையான உண்மைகளை வெளியிடவில்லை.
காங்கிரஸின் ஒவ்வொரு கூட்டத்திலும் வந்தே மாதரம் கூட்டாகப் பாடப்படுகிறது. கேள்வி என்னவென்றால்: வந்தே மாதரம் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் பாடப்படுகிறதா இல்லையா? தேசத்தின் ஆன்மாவின் இந்த மகத்தான மந்திரத்தை சர்ச்சைக்குரியதாக்குவதன் மூலம், பாஜக ஒரு பாவத்தைச் செய்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி இந்தப் பாவத்தில் பங்குபெறாது. இந்தத் தேசியப் பாடல் 'வந்தே மாதரம்' எப்பொழுதும் எங்களுக்குப் பிரியமானது, எப்பொழுதும் புனிதமானது, இனியும் புனிதமாகவே இருக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications