டெல்லி ஜும்மா மசூதி போராட்டம்! பகைமையை ஏற்படுத்தியதாக 2 பேர் கைது! போலீஸ் விளக்கம்
டெல்லி: நுபுர் சர்மாை கைது செய்ய வலியுறுத்தி டெல்லி ஜும்மா மசூதிக்கு வெளியே நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது இருபிரிவினர் இடையே பகைமையை ஊக்குவித்தல் பிரிவில் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் நுபுர் சர்மா கருத்து தெரிவித்த விவகாரம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு வெளிநாடுகளிலும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தியாவிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசம், ஜார்கண்ட் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.
நபிகள் நாயகம் மீது அவதூறு: நுபுர் சர்மா தலையை வெட்ட உத்தரவிட்ட காஷ்மீர் முஸ்லிம் மத குரு கைது
தொடர் போராட்டங்கள்
பாஜகவின் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றது. அதாவது நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்ய வேண்டும். இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்கார்கள் வலியுறுத்தினர்.
டெல்லியில் போராட்டம்
இதேபோல் நேற்று முன்தினம் தொழுகைக்கு பின்னர் டெல்லி ஜும்மா மசூதிக்கு வெளியே முஸ்லிம் மக்கள் திரண்டனர். நூபுர் சர்மா, நவீன் ஜிண்டாலை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியதோடு, பதாகைகள் ஏந்தி இருந்தனர். இந்நிலையில் மசூதி அருகே தொழுகைக்கு பிறகு ஏராளமானவர்கள் அனுமதியின்றி கூடி போராட்டம் நடத்தியதாக கூறப்பட்டது.
2 பேர் கைது
இந்த நிலையில் டெல்லி போராட்டம் தொடர்பாக 2 பேரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். இதுபற்றி டெல்லி மத்திய துணை போலீஸ் ஸ்வேதா சவுகான் கூறுகையில், ‛‛ஜும்மா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக 1500 பேர் கூடினர். அதன்பிறகு 300 பேர் மசூதிக்கு வெளியே திரண்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளோம். இந்திய தண்டனை சட்டம் 153ஏ பிரிவின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Recommended Video
முன்கூட்டிய திட்டமிடல்
வெள்ளிக்கிழமை தொழுகையில் ஏதாவது நடக்கலாம் என எச்சரிக்கையாக இருந்தோம். பதாகைகளுடன் போராட்டம் நடத்தியது என்பது முன்கூட்டிய திட்டமிடலை காட்டுகிறது. மேலும் சம்பவம் தொடர்பாக வாட்ஸ்அப்பில் பரவிய செய்திகளின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக டெல்லியை சேர்ந்த 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிலர் வெளியூரை சேர்ந்தவர்களாக உள்ளனர்''என்றார். இந்திய தண்டனை சட்டம் 153 ஏ என்பது மதம், இனம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் இருபிரிவினர் இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்துக்கு பாதகமான செயல்களை மேற்கொள்ளுதல் ஆகிய பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.