எடப்பாடி தலையில் இடியை இறக்கும் புகழேந்தி-இரட்டை இலை, பொதுச்செயலர் பதவி-தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி
டெல்லி: அண்ணா திமுகவின் இரட்டை இலை சின்னம் மற்றும் பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுகவின் முன்னாள் நிர்வாகி பெங்களூர் புகழேந்தி மனு அளித்துள்ளார். அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து பெங்களூர் புகழேந்தி இந்த மனுவை அளித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வருகிறார். அதிமுகவின் இரட்டை இலை சின்னமும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிடமே இருக்கிறது.

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் முன்னர் அனுமதி அளித்திருந்தது. இதனடிப்படையில் தேர்தல் ஆணையமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் விசாரணையை மேற்கொண்டு வந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியின் மனுவை டிஸ்மிஸ் செய்தது. மேலும் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் எனவும் அனுமதி அளித்தது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மற்றும் பொதுச்செயலாளர் பதவி குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. தர்மமே இறுதியில் வெல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரவேற்பும் தெரிவித்திருந்தது.
அதிமுகவில் மூத்த தலைவர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை சிவி சண்முகம் எம்பி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த பின்னணியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி பெங்களூர் புகழேந்தி இன்று ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம்- பொதுச் செயலாளர் பதவி குறித்து விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனடிப்படையில் இரட்டை இலை சின்னம், பொதுச் செயலாளர் பதவி குறித்த விசாரணையை தேர்தல் ஆணையம் விரைவாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications