இலவச மின்சாரம், முதல்வராக சீக்கியர்.. பஞ்சாப் தேர்தலுக்கு வரிந்து கட்டும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

தாவும் காங். தலைவர்கள்
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் சலசலப்புகள் அதிகரித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிரோமணி அகாலி தளத்தில் அடுத்தடுத்து இணைந்து வருகின்றனர். இந்த கட்சி தாவல் தொடரும் என கூறப்படுகிறது.

அகாலி-பிஎஸ்பி கூட்டணி
பஞ்சாப் தேர்தலில் அகாலி தளத்துடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி டெல்லியைப் போல ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் களப்பணிகளில் இறங்கி இருக்கிறது ஆம் ஆத்மி.

முதல்வர் வேட்பாளராக சீக்கியர்
இதனால் பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக சீக்கியர் ஒருவர்தான் அறிவிக்கப்படுவார் என ஏற்கனவே கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். அப்படி தாங்கள் அறிவிக்கும் முதல்வர் வேட்பாளர் சீக்கியர்களுக்கு பெருமிதம் தரக் கூடியதாகவும் இருக்கும் என்றும் பொடிவைத்திருந்தார் கெஜ்ரிவால்.

ஆட்சி அமைத்தால் இலவச மின்சாரம்
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் வென்று ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் கெஜ்ரிவால். இது தொடர்பான விவரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்படும்; டெல்லியில் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதற்கு மிகப் பெரும் வரவேற்பு உள்ளது என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications