ரபேல் டீலிற்கு 2 வாரம் முன் பிரான்ஸ் சென்ற அனில் அம்பானி.. ஏன் சென்றார்? திடுக்கிடும் தகவல்கள்!
ரபேல் ஒப்பந்தம் 2015ல் செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை சந்தித்து இருக்கிறார்.
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் 2015ல் செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை சந்தித்து இருக்கிறார். இதுகுறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
2015 ஏப்ரல் மாதம் ரபேல் ஒப்பந்தம் பிரதமர் மோடி - பிரதமர் முன்னாள் அதிபர் ஹோலண்டே இடையில் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய ஒப்பந்ததாரராக ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது.
இந்த நிறுவனம் இந்தியாவில் எச்ஏஎல் நிறுவனத்திற்கு பதிலாக சேர்க்கப்பட்டது. இது எதனால் நடந்தது, ஏன் பிரதமர் மோடி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டார் என்று பல கேள்விகளை காங்கிரஸ் கட்சி எழுப்பி இருக்கிறது.
சென்று பார்த்தார்
இந்த நிலையில்தான் ரபேல் ஒப்பந்தம் 2015ல் செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை சந்தித்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேன்-ஈவ் லே அலுவலகத்திற்கு அனில் அம்பானி சென்றுள்ளார்.
பேசினார்
அங்கு பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரின் அலுவலக அதிகாரிகளை சந்தித்து பேசி இருக்கிறார். முக்கியமாக இந்த ரபேல் ஒப்பந்தத்தில் ஈடுபட இருக்கும் பிரான்சின் வெளியுறவு துறை அதிகாரிகளையும் அவர் அந்த அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். ஆனால் இந்த சந்திப்பு ஏன் நடந்தது என்ற விவரம் வெளியாகவில்லை.
திறக்கப்பட்டது
இந்த நிலையில்தான் மார்ச் முதல் வாரம் அனில் அம்பானி பிரான்ஸ் சென்ற ஒரு வாரத்தில் ரிலையன்ஸ் டிபன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்குகிறார். பின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்கு மார்ச் கடைசி வாரம் மத்திய பாதுகாப்பு துறை ஒப்புதல் வழங்குகிறது. மார்ச் 28, 2015 முறையாக அனுமதி பெறுகிறது ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம்.
மோடி வந்தார்
அதன்பின் ரபேல் ஒப்பந்தம் சரியாக திட்டமிடப்படுகிறது. சரியாக ஏப்ரல் 9-11, 2015ல் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். அந்த பயணத்திட்டத்தில் அனில் அம்பானியும் சேர்க்கப்படுகிறார். ரபேல் ஒப்பந்தம் அங்கு சரியாக அப்போது கையெழுத்தாகிறது. ஆச்சர்யமாக எச்ஏஎல் நிறுவனம் இதில் இருந்து நீக்கப்பட்டு ரிலையன்ஸின் டிபன்ஸ் நிறுவனம் இதில் சேர்க்கப்படுகிறது.
வரிசையாக எல்லாம் நடந்தது
இது அனைத்தும் சரியாக 3-4 வார இடைவெளியில் அடுத்தடுத்து நடந்து உள்ளது. அனில் அம்பானி பிரான்ஸ் சென்று பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் பேசவும், ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை தொடங்கவும், பிரதமர் மோடி அங்கு செல்லவும், ஒப்பந்தம் நடக்கவும் பின் சரியாக அதில் ரிலையன்ஸ் நிறுவனம் இணையவும் எல்லாம் சரியாக இருந்துள்ளது. இப்படி வரிசையாக எல்லாமும் திட்டமிட்டபடி நடந்து இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கிறது.