மலைப் பகுதியிலும் குறி தப்பாது.. பதுங்கு குழிகளை பந்தாடும் ஹம்மர் ஏவுகணை.. ரபேலில் பொருத்தப்படுகிறது
டெல்லி: ரபேல் போர் விமானங்களில் ஹம்மர் ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன. ராணுவ அவசர கால கொள்முதல், விதிமுறையின்கீழ், இந்த ஏவுகணை வாங்கப்பட உள்ளது.
Recommended Video
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் விமான நிறுவனத்துடன், 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 59,000 கோடியாகும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை 9 ரஃபேல் விமானங்களை இந்திய விமானப்படையிடம் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஒப்படைத்துள்ளது. இதுவரை அவை இந்தியா வரவில்லை.
இந்திய எல்லையில் சீனா அட்டகாசம்.. அதி நவீன ஆயுதங்களுடன், 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு.. ஷாக்
அதிவேக விமானம்
கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி, பிரான்ஸ் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரபேல் விமானங்களை பெற்றுக் கொண்டு, அவற்றின் சக்கரங்களுக்கு கீழே, எலுமிச்சை வைத்து பூஜை செய்துவிட்டு வந்தார். ரபேல் விமானம் அதிகபட்சமாக 2,450 கி.மீ வேகத்தில் பறக்க கூடியது. ரேடார்களில் தப்பாமல் பறக்க கூடியது.
5 ரபேல் விமானங்கள்
முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன 5 ரஃபேல் போர் விமானங்கள் வரும் 29ஆம் தேதி இந்தியாவுக்கு வருகின்றன. இந்த போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலா விமானப்படை விமான தளத்தில் சேர்க்கப்படுகின்றன. பின்னர் லடாக் பகுதியில் ரோந்து சுற்ற பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட தூர ஏவுகணைகள்
இந்த நிலலையில் ரபேல் விமானத்தை மேலும் வலுவாக்கும் விதமாக அதில் ஹம்மர் ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன. இந்த போர் விமானங்களில் பொருத்தக் கூடிய நீண்ட தூர இலக்கை தாக்கும் ஸ்கேல்ப் ஏவுகணை, வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் மெடியர் ஏவுகணைகளும் அடுத்து வர உள்ளன.
அவசர கால கொள்முதல்
இந்த நிலையில்தான் ரபேல் விமானங்களில் பொருத்த பிரான்ஸ் நாட்டிடமிருந்து ஹம்மர் ஏவுகணைகளை நமது விமானப்படை வாங்குகிறது. பாதுகாப்பு படைக்கு மத்திய அரசு வழங்கி இருக்கும் அவசர கால கொள்முதல் வழிமுறைகளின்கீழ், இந்த ஏவுகணை வாங்கப்படுகிறது. பிரான்ஸும் ஏவுகணைகளை உடனடியாக இந்தியாவுக்கு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
விரைந்து வழங்கும் பிரான்ஸ்
ஹம்மர் ஏவுகணைகள் பிரான்ஸ் நாட்டின் விமானப்படை மற்றும் கடற்படைக்காக பயன்படுத்தப்படுவையாகும். 60 முதல் 70 கி.மீ. வரையில், தரையில் உள்ள இலக்கை வானில் இருந்து துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது ஹம்மர் ஏவுகணைகள். "ஹம்மர் ஏவுகணைகளுக்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. ரஃபேல் போர் விமானத்திற்கான இந்த ஏவுகணையை குறுகிய காலத்தில் வழங்க பிரெஞ்சு அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்" என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
லடாக்
கிழக்கு லடாக் போன்ற மலைப்பகுதிகள் உட்பட எந்தவொரு நிலப்பரப்பிலும் இலக்கை குறி வைத்து தாக்க வல்லது ஹம்மர். எந்த மாதிரி பதுங்கு குழிகளையும் அல்லது கடினமான மறைவிடங்களையும், தகர்க்கும் ஆற்றல் கொண்டது ஹம்மர் ஏவுகணை. எனவே இது இந்திய விமானப் படைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் அம்சமாகும்.