ஏகலைவனுக்கு நிகழ்ந்ததை போல.. ஒட்டுமொத்த இந்தியர்களின் விரலையும் வெட்டுகிறீர்கள்! - ராகுல்காந்தி
டெல்லி: ஏகலைவனின் விரலை வெட்டிய துரோணாச்சாரியாரை போல, இந்திய மக்களின் விரல்களை நீங்கள் வெட்டுகிறீர்கள் என மத்திய அரசு மீது ராகுல் காந்தி சரமாரியான குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் அரசியலமைப்பு தின விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசியிருந்த ராகுல் காந்தி மத்திய அரசு மீது சரமாரியாக விமர்சனங்களை அடுக்கியுள்ளார். அவர் பேசியதாவது, "ஏகலைவனுக்கு துரோணாச்சாரியார் குருவாக வரவேண்டும் என்று விருப்பம். ஆனால் அவரோ, ஏகலைவனின் கட்டை விரலை காணிக்கையாக கேட்டு வெட்டிவிட்டார். அதேபோல இந்திய இளைஞர்களின் கட்டை விரலை பாஜக துண்டித்துக்கொண்டிருக்கிறது.

அக்னி வீரர்/அக்னிபாத் திட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இப்படியான திட்டம் மூலம் இந்திய இளைஞர்களின் கட்டை விரலை பாஜக வெட்டி கொண்டிருக்கிறது. இன்னும் ஏராளமான உதாரணங்களை இதற்கு சொல்லலாம். மகாராஷ்டிராவில் தாராவியை அதானி வசம் ஒப்படைப்பதன் மூலம் அங்குள்ள இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை பறிக்கிறீர்கள்., துறைமுகங்கள், விமான நிலையங்கள் தொடங்கி தேசத்தின் பாதுகாப்பு அரண்கள் அனைத்தையும் அதானி வசம் ஒப்படைப்பதன் மூலம் சிறு குறு வணிகர்களின் கட்டை விரலை வெட்டுகிறீர்கள்.
விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக சென்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கை, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை கொடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதன் மூலம் விவசாயிகளின் விரல்களை வெட்டுகிறீர்கள். சம்பல் மசூதி அருகே நடந்தது என்ன? அது ஒரு வன்முறை. எங்களை நீங்கள் அங்கு அனுமதிக்கவில்லை. இருப்பினும் எங்களை அந்த பகுதி இளைஞர்கள் நேரில் வந்து சந்தித்தனர். வன்முறையை காரணம் காட்டி 5 அப்பாவிகளை போலீசார் சுட்டு கொண்டுவிட்டதாக குற்றம்சாட்டினர்.
அரசியலமைப்பு சட்டம் அன்பை போதிக்க வலியுறுத்துகிறது. ஆனால் நீங்கள் வெறுப்பை விதைத்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போது ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவோம். 50% என்று இருக்கும் இடஒதுக்கீடு தடையை அடித்து நொறுக்குவோம். நீங்கள் அதை காண்பீர்கள். எங்கள் சித்தாந்தம் அரசியலமைப்பை பாதுகாப்பதுதான்.
இன்று இந்தியாவில் அனைத்து அரசியல் அமைப்புகளுக்கான அரசியல் சமத்துவம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதனால் தலித்துகள் தொடங்கி, பழங்குடியினர், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், விவசாயிகள் என அனைவரின் கட்டை விரல்களும் துண்டிக்கப்பட்டு வருகிறது" என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications