அமெரிக்காவே நடவடிக்கை எடுக்குது.. நீங்க ஏன் தயங்குறீங்க? உடனே அதானியை அரெஸ்ட் பண்ணுங்க - ராகுல்
டெல்லி: தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் அமெரிக்க செக்யூரிட்டி கவுன்சில் கவுதம் அதானி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது. மேலும், அதானிக்கு எதிராக கைது வாரண்டும் பிறப்பித்திருக்கிறது. இந்நிலையில், அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "அதானி மீது லஞ்ச புகார்கள் உள்ளபோதும் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் அவர் சுதந்திரமாக வலம் வருகிறார். இந்த புகாரில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதானி முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உடனே அமைக்க வேண்டும். இந்திய மற்றும் அமெரிக்க சட்டங்களை அதானி மீறியிருப்பது, அமெரிக்கா நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகள் மூலம் தெளிவாகியுள்ளது.

அதானி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், மேலும் அவரை பாதுகாத்துவரும் செபி தலைவர் மதாபி புச் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடி இருக்கும்வரை, அதானி இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க குரல் எழுப்பப்படும்" என்று கூறியுள்ளார்.
அதானி குழுமத்தின் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. சமீபத்தில் கூட ஹிண்டன்பர்க் எழுப்பியிருந்த குற்றச்சாட்டுகள் உலகம் முழுவதும் பேசப்பட்டது. பங்கு சந்தையில் அதானியின் பங்குகளின் மதிப்பை உயர்த்த முறைகேடுகள் செய்யப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் முறைகேடுகள் எதிலும் அதானி நிறுவனம் ஈடுபடவில்லை என்று செபி சொல்லிவிட்டதால் வழக்கும் நீர்த்துப்போனது.
இப்படி இருக்கையில் மீண்டும் அதானி குழுமம் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்த முறை அமெரிக்க செக்யூரிட்டி கவுன்சில் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. அதாவது இந்திய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் உடன் மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் செய்ய, அமெரிக்காவின் மாநில மின்சார நிறுவனங்களை வற்புறுத்த லஞ்சம் தர அதானி குழுமம் முன்வந்திருக்கிறது. ரூ. 2,029 கோடியை லஞ்சமாக கொடுக்க அதானி குழுமம் முன்வந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க பெடரல் நீதிமன்றம் அதானிக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பின்னணியில்தான், அதானியை கைது செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications