லோக்சபாவில் ராகுல்.. ராஜ்யசபாவில் கார்கே.. நாடாளுமன்றத்தில் ஒரே நாளில் காங்கிரஸ் செய்த சம்பவங்கள்
டெல்லி: நாடாளுமன்றம் இப்போது நடந்து வரும் நிலையில், இன்றைய தினம் காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு பரபரப்பைக் கிளப்பியது. ராஜ்யசபாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே உரையாற்றிய நிலையில், லோக்சபாவில் ராகுல் காந்தி பேசினார். இருவரும் அரசியலமைப்பு, அக்னிவீர் எனப் பல விவகாரங்கள் குறித்தும் பேசிய நிலையில், அதற்கு ஆளும் தரப்பு எம்பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதலில் ராஜ்யசபாவில் பேசிய காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான கார்கே மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஆளும் தரப்பு வெற்று கோஷங்களை மட்டுமே முன்வைத்ததாகவும் வளர்ச்சிப் பணிகள் எதையும் செய்யவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

அக்னிவீர் போன்ற திட்டமிடப்படாத திட்டங்கள் கொண்டு வரப்பட்டதால் இளைஞர்களின் மன உறுதி சிதைந்துள்ளது என்று தெரிவித்த அவர், அக்னிவீர் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கார்கே பேச்சு: அக்னிபாத் திட்டம் என்பது கடந்த ஜூன் 2022இல் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிவார்கள். அவர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.. மேலும், அவர்கள் 'அக்னி வீரர்கள்' என்று அழைக்கப்படுவார்கள். நான்கு வருடச் சேவைக்குப் பிறகு, அக்னி வீரர்களில் 25 சதவீத வீரர்கள் மட்டுமே ராணுவத்தில் தக்க வைக்கப்படுவார்கள் மற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள். இதை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், அது தொடர்பாகவே கார்கே பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய கார்கே, "அரசியலமைப்பு இருப்பது வரை மட்டுமே தேர்தலை நடத்த முடியும். அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி யாரும் பேசக்கூடாது எனச் சிலர் எதிர்க்கிறார்கள்.. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் அது குறித்துப் பேச அவர்கள் ரெடியாக உள்ளனர். தொடர்ந்து அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர்.
வெற்று கோஷம்: பிரதமர் நரேந்திர மோடி கோஷங்களை எழுப்புவதில் மட்டுமே வல்லவராக இருக்கிறார். கடந்த ஒரு வருடமாக மணிப்பூர் எரிந்து கொண்டிருந்தது.. ஆனால் பிரதமர் மோடி அந்த மாநிலத்திற்குச் செல்லவில்லை.. எதிர்க்கட்சிகள் சாமானியர்களின் துயரங்களைப் பற்றிப் பேசுகின்றன, ஆனால் மோடி ஜி "மன் கி பாத்" மட்டுமே பேசுகிறார்" என்று அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தி: ராஜ்யசபாவில் கார்கே என்றால் லோக்சபாவில் ராகுல் காந்தியின் பேச்சு பரபரப்பைக் கிளப்பியது. வாழ்க அரசியல் சாசனம் என்று ராகுல் காந்தி தனது உரையைத் தொடங்கிய நிலையில், அப்போது பாரத் மாதா கி ஜே என பாஜக எம்பிக்கள் கோஷமிட்டனர். இதையடுத்து பேசத் தொடங்கிய ராகுல் காந்தி முதலில் இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டி உரையாற்றினார். சிவன் கையில் இருக்கும் திரிசூலம் வன்முறையைக் குறிப்பது இல்லை என்ற அவர், அது அகிம்சைக்கானது என்றும் காங்கிரஸ் சிவன் படத்தைக் காட்டியதால் சிலருக்குக் கோபம் வந்திருக்கலாம் என்றும் கூறினார்.
மேவும், பேசிய அவர், "தொடர் தாக்குதல்களில் இருந்து அரசியலமைப்பைப் பாதுகாத்துள்ளோம்.. எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் அவர், "அதிகாரத்தை விட எப்போதும் உண்மை சக்தி வாய்ந்தது.. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை.. ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை" என்றார். ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டு இருக்கும் போது அதற்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
இது மட்டுமின்றி அவர் நீட், வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிவது போன்ற பல விவகாரங்கள் குறித்தும் பேசினார். இப்படி லோக்சபாவில் ராகுல் காந்தியும், ராஜ்யசபாவில் கார்கேவும் ஆவேசமாகப் பேசினர். கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் பெரியளவில் காரசார விவாதம் எதுவும் நடக்காத நிலையில், நேற்று இரு அவைகளிலும் விவாதத்தில் அனல் பறந்தன.












Click it and Unblock the Notifications