அந்த 4 பேருக்குத்தான் வேளாண் சட்டம்... நாட்டை வழிநடத்துறதும் அவங்கதான்... மக்களவையில் ராகுல் ஆவேசம்!
டெல்லி: வேளாண் சட்டங்கள் குறித்து மக்களவையில் விவாத்திருக்க வேண்டும். ஆனால் விவாதிக்க அனுமதிப்படவில்ல என்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார்.
இந்தியாவை சேர்ந்த ஒரு நான்கு பேர் ஆதாயம் பெறத்தான் வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த 4 பேர்தான் இந்தியாவை வழிநடத்துகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களை நசுக்கும் சட்டத்தை அரசு அமல்படுத்துகிறது என்றும் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 70 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.
பல்வேறு தரப்பினரும் ஆதரவு
விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். நாடளுமன்ற மாநிலங்களவையிலும், மக்களவையிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்படி பேசினார்கள். நேற்று நாடளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி பேசினார்.
விவசாயிகள் மீது எங்களுக்கு மரியாதை இருக்கு
அப்போது அவர் வேளாண் சட்டங்கள் அமல்படுத்திய பின்னர் இதுவரை எந்தச் சந்தையும் மூடப்படவில்லை. நாட்டில் எங்கும் குறைந்தபட்ச ஆதார விலை முடிவுக்கு வரவில்லை. இந்த உண்மையை நாம் மறைக்கிறோம். இதற்கு எந்த அர்த்தமும் இல்லை. இந்த அவையும் இந்த அரசும் வேளாண் சட்டங்கள் குறித்துக் கருத்து கூறும் விவசாயிகளை மதிக்கிறோம். அரசின் மூத்த அமைச்சர்கள் விவசாயிகளுடன் தொடர்ந்து பேசுவதற்கு அதுவே காரணம். விவசாயிகள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு என்று கூறினார்.
மோடியை தாக்கிய ராகுல்
மேலும் அவர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடத்தாமல் வேறு விஷயங்கள் பற்றி பேசுகின்றன. விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்ற என்று கூறினார். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. இன்று மக்களவையில் வேளாண் சட்டங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார். ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-
பசி, தற்கொலையை கொடுத்தீர்கள்
பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவையில் பேசும்போது வேளாண் சட்டங்களின் உள்ளடக்கம் மற்றும் நோக்கம் பற்றி பேசாமல், எதிர்க்கட்சி பற்றி பேசினார். இன்று நான் அவரை(பிரதமர்) மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும் என்றும் சட்டங்களின் உள்ளடக்கம் மற்றும் நோக்கம் குறித்து பேச வேண்டும் என்றும் நினைக்கிறேன். வேளாண் சட்டம் மூலம் விவசாயிகளுக்கு அவர்கள் விருப்பங்களை கொடுத்துளோம் என்று பிரதமர் கூறுகிறார். ஆம், பசி, வேலையின்மை மற்றும் தற்கொலை என 3 விருப்பங்களை நீங்கள்(பிரதமர்) கொடுத்தீர்கள்.
4 பேர் இந்தியாவை வழிநடத்துகின்றனர்
வேளாண் சட்டங்களால் எந்த நிலையிலும் விவசாயிகளுக்கு ஆபத்துதான் உள்ளது. இந்த சட்டம் குறித்து மக்களவையில் நீண்ட நேரம் விவாத்திருக்க வேண்டும். ஆனால் விவாதிக்க அனுமதிப்படவில்லை. இந்தியாவை சேர்ந்த ஒரு நான்கு பேர் ஆதாயம் பெறத்தான் வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த 4 பேர்தான் இந்தியாவை வழிநடத்துகின்றனர். அவர்கள் யார் என்று மக்களுக்கு நன்கு தெரியும்.
பாஜக எம்பிக்கள் கடும் கூச்சல்
விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களை நசுக்கும் சட்டத்தை அரசு அமல்படுத்துகிறது . இந்த சட்டங்கள் மூலம் விவசாயிகள் பலரை அரசு பலி கொடுத்து விட்டது. வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் மண்டிகளை அரசு விற்பனை செய்து விட்டது என்று ராகுல் காந்தி பேசினார். ராகுல் காந்தி ஆவேசமாக பேசும்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை சமானப்படுத்தினார்.