ஒரு பக்கம் கேசிஆர்.. மறுபக்கம் மம்தா.. நடுவில் சங்கடத்தில் முதல்வர் ஸ்டாலின்.. காங்கிரஸுக்கு கல்தா?
டெல்லி: ஒரு பக்கம் கேசிஆர், மறுபக்கம் மம்தா பானர்ஜி... இவர்களின் கண்டிஷன்களுக்கு நடுவே முதல்வர் ஸ்டாலின் தர்மசங்கடத்தில் இருக்கும் நிலையில் காங்கிரஸ் குறித்து அவர் என்னமாதிரியான முடிவை எடுப்பார் என்ற கேள்வி எழுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தேசிய அளவில் 3ஆவது அணியை அமைப்பது குறித்து எதிர்க்கட்சிகள் முயற்சித்து வந்தன. ஆனால் அந்த தேர்தலில் மூன்றாவது அணி அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில் பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மூன்றாவது அணி அமைக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதாவது பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணி என்ற ஒன்றை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழக முதல்வர்
இதுகுறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இவர் கடந்த வாரம் மகாராஷ்டிா முதல்வர் உத்தவ் தாக்கரே, என்சிபி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அது போல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் மூன்றாவது அணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அவரும் காங்கிரஸ் இல்லாத அணியையே விரும்புகிறார். மேற்கு வங்கத்தில் ஆளுநரின் அத்துமீறல் இருப்பதாக தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலினுடன் பேசிய மம்தா பானர்ஜி, விரைவில் தான் ஒருங்கிணைக்கும் எதிர்க்கட்சி மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் சம்மதம்
இதற்கு முதல்வர் ஸ்டாலினும் சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தான் அரசியலில் ஈடுபட்ட காலத்திலிருந்து தற்போது வரை நடந்தது குறித்து சுயசரிதையை எழுதியுள்ளார். அதற்கு உங்களில் ஒருவன் என்ற பெயரை வைத்துள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது.

மாநில முதல்வர்களுக்கு அழைப்பு
இதற்கு மற்ற மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த புத்தகத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிடுகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் சங்கமம்
வரும் 28ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஒன்றாக அணிவகுக்கிறார்கள். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சி மாநில முதல்வர்கள் கூட்டத்தை ஒருங்கிணைப்பதாக கூறிய நிலையில் அந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பொதுவானவராக இருப்பார் என தெரிகிறது. முதல்வர்கள் சந்திரசேகரராவும் சரி மம்தா பானர்ஜியும் சரி பாஜகவை எதிர்க்கும் வியூகத்தில் காங்கிரஸ் இருப்பதை விரும்பவில்லை.

இணக்கமான முதல்வர் ஸ்டாலின்
ஆனால் முதல்வர் ஸ்டாலினோ காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமான போக்கையே கடைப்பிடித்து வருகிறார். பாஜகவை எதிர்ப்புதற்காக எந்த ஒரு அணியும் காங்கிரஸை ஒதுக்கி விட முடியாது என அவர் அடிக்கடி பரிந்துரையும் செய்து வருகிறார். கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது மக்களவையில் பேசிய ராகுல் காந்தி கூறுகையில் இந்தியா என்பது தனி ராஜாங்கம் கிடையாது. பல மாநிலங்களால் இணைந்த ஒன்றியம் என தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின் என்ன செய்வார்
அது போல் தமிழகத்தை பாஜக ஒரு போதும் ஆள முடியாது என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கருத்தாக்கத்தை புரட்சிகரமாக எடுத்துரைத்ததற்கு ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பில் நன்றி. தமிழர்களின் நீண்ட கால வாதங்களுக்கு நீங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளீர்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனால் காங்கிரஸுடன் இணக்கமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸை தவிர்த்துவிட்டு மம்தா, சந்திரசேகர் ராவ் கூறுவது போல் மூன்றாவது அணி உருவாகுவது என்ற பிரச்சினையை எப்படி சமாளிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துளளது.












Click it and Unblock the Notifications