அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை.. மோடி அறிவிப்பில் உள்நோக்கம்.. ஓவைசி குற்றச்சாட்டு
டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான, அறிவிப்பு இப்போது வெளியான பின்னணியில் டெல்லி சட்டசபை தேர்தல் இருக்கிறது என்று, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, குற்றம்சாட்டியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க 'ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது, இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இதற்கு அசாதுதீன் ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதை பாருங்கள்: இந்த அறிவிப்பை பிப்ரவரி 8ம் தேதிக்கு பிறகு மோடி வெளியிட்டிருக்கலாம். 11ம் தேதிவரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. ஆனால் இப்போது அவர் அறிவிக்க காரணம், டெல்லி தேர்தலில் எப்படியாவது பாஜகவை வெற்றிபெற வைத்துவிட வேண்டும் என்பதுதான்.
இது ஒருவகையில் தேர்தல் நடத்தை விதிமீறல். மேலும், அயோத்தியில் வேறு இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் பெற வேண்டாம் என்பது முஸ்லீம் சமூக மக்களின் முடிவாக உள்ளது. சன்னி வக்ஃபு வாரியமும், இதையேற்று, வேறு இடத்தில் தரப்படும் நிலத்தை வாங்க கூடாது.
சிலைகளை ஒரு மசூதிக்குள் வைத்திருந்தார்கள். அதன் பின்னர் மசூதி இடிக்கப்பட்டது. மசூதி இடிக்கப்படுவது ஒரு குற்றச் செயல் மற்றும் தேசிய அவமானம். அத்வானியின் ரத் யாத்திரையுடன் பிரதமர் மோடியும் தானே பயணித்தார். அதை நாம் மறக்க முடியாது. டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பதை நாம் எப்படி மறக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ தளவாட உற்பத்தி மையமாகிறது உத்தர பிரதேசம்: மோடி பேச்சு
இதுகுறித்து, பாஜகவை சேர்ந்த, மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் 'முஸ்லிம்கள் இந்துக்களுடன் சமாதானத்தை விரும்புகிறார்கள். ஓவைசி அதற்கு மாறாக பேசி வருகிறார்' என்கிறார்.