Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2024-ல் சர்வதேச அரங்கில் இந்தியா: பாகிஸ்தானுக்கான ராவி நதிநீர் நிறுத்தம், சீனாவுடன் ஒப்பந்தம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2024-ம் ஆண்டு சர்வதேச அரங்கில் இந்தியாவின் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமான கவனத்தை ஈர்த்திருந்தன. பாகிஸ்தானுக்கான ராவி நதிநீர் நிறுத்தம் தொடங்கி அபுதாபியில் முதலாவது இந்து கோவில் திறப்பு, உக்ரைன்- ரஷ்யா யுத்தத்தில் தலையீடு உள்ளிட்டவை என சர்வதேச விவகாரங்களில் இந்தியா 2024-ம் ஆண்டு முழுமையான பங்களிப்பை செலுத்தியிருந்தது.

2024-ம் ஆண்டு இந்தியாவின் சர்வதேச அரசியல் நிகழ்வுகளின் செயல்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் தொகுப்பு:

year ender 2024 india 2024

2016-ம் ஆண்டில் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல், 2019-ம் ஆண்டின் பாலகோட் வான்வழித் தாக்குதல்கள் போன்ற துணிச்சலான நடவடிக்கைகள் முதல் தடுப்பூசி மைத்ரியுடன் தொற்றுநோய் தடுப்பிற்கான உதவிக் கரம் நீட்டுவது வரை, இந்தியா உறுதியுடனும் மனிதாபிமானத்துடனும் வழிநடத்த முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது. ஜி-20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை சேர்ப்பது, சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பு போன்ற முன்முயற்சிகள் அனைவருக்கும் நியாயமான, நீடித்த எதிர்காலத்திற்கான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், குவைத், போலந்து, எகிப்து, பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டதன் மூலம் நீண்டகாலமாக செயலற்ற நிலையில் இருந்த உறவுகளை புதுப்பித்தது. இது பெரிய, சிறிய நாடுகளின் நல்லுறவுகளை இந்தியா மதித்து நடக்கிறது என்ற செய்தியை வலுப்படுத்துவதாக அமைந்தது. நெருக்கடி நிலைகள் ஏற்பட்ட போது, இந்தியா அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது. கங்கா, அஜய் போன்ற நடவடிக்கைகள் மோதல் நடைபெறும் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதை உறுதி செய்தன. அதே நேரத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாடுகளுக்கு உதவிகள் வழங்கியதுடன் உலக நாடுகளுக்கு இந்தியாவின் ஒற்றுமையை பறைசாற்றின. உலக அரங்கில் தனது செயல்பாடுகள் மூலம் பிற நாடுகளுக்கு உதவிடவும், ஊக்கமளிக்கவும் இந்தியா தயாராக உள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

2024-ம் ஆண்டு இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைந்துள்ளது. இது உலகளாவிய தலைமைப் பொறுப்பு வகிக்கக் கூடிய நாடாக அதன் நிலையை உறுதிப்படுத்தியது. இந்தியாவின் இந்த ராஜதந்திர நடவடிக்கையுடன் கூடிய பயணங்களின் சில முக்கிய தருணங்களை இந்த ஆவணம் எடுத்துக்காட்டுகிறது.

சர்வதேச நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை உபசரிப்பது முதல் சர்வதேச அளவில் அமைதி முயற்சிகளில் முக்கியப் பங்கு வகிப்பது வரை, இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடுகள் உலக அரங்கில் அதன் செல்வாக்கை வெளிப்படுத்தியுள்ளன. 2024-ம் ஆண்டில் இந்தியா மேற்கொண்ட சில முக்கிய ராஜதந்திர நடவடிக்கைகள் சில இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

பாஸ்டில் தினம் முதல் குடியரசு தினம் வரை

இந்தியாவின் 75-வது குடியரசு தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்துள்ள பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் இருந்தே உலக நாடுகளின் தலைவர்களை சமஅளவில் கருதும் இந்தியாவின் செயல்பாடுகள் தெளிவாகிறது. இது 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பாஸ்டில் தினத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி பிரான்ஸ், இந்தியாவுக்கு விடுத்த அழைப்பின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தகையப் பரிமாற்றங்கள் இந்தியா - பிரான்ஸ் நாடுகளிடையே வலுவான நம்பிக்கை, நட்புறவை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன.

கத்தார் நாட்டிலிருந்து இந்திய கடற்படை வீரர்கள் 8 பேர் விடுவிப்பு

இந்தியா தனது நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்காக வலுவான வாதங்களை வைப்பதன் மூலம் அதன் வரலாற்று ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக உள்ளது. பிரதமர் மோடியின் தனிப்பட்ட தலையீடு காரணமாக, மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கத்தார் நாட்டிலிருந்து விடுவித்தது, இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகும். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கும், கத்தாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானிக்கும் இடையிலான நேரடி தகவல் தொடர்பு இந்த வெற்றிக்கு வழிவகுத்தது. இந்த நடவடிக்கை மரண தண்டனையை மூன்று முதல் 25 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையாக குறைத்தது. மோடி தலைமையிலான மத்திய அரசின் துரிதமான நடவடிக்கைகள் பாதுகாப்பை உறுதி செய்து, மரண தண்டனையை நிறுத்தியது.

அபுதாபியில் முதல் இந்து கோவில் திறப்பு

அபுதாபியில் நாட்டின் முதல் இந்து கோவிலான பிஏபிஎஸ் கோவிலை திறந்து வைக்கவும், அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சு வார்த்தையை நடத்தவும் பிரதமர் மோடி பிப்ரவரி 13-14 தேதிகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு பயணம் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக முன்னாள் கடற்படை வீரர்களின் விடுவிப்பு இருந்தது.

ராவி நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

வரலாற்று ரீதியாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, கணிசமான நீர்வளங்களின் மீது உரிமைகள் இருந்தபோதிலும், இந்தியா அதன் உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்தாமல் ஒப்பந்தத்தின் பெரும்பாலான விதிகளை கடைப்பிடித்து வந்தது. ராவி ஆற்றிலிருந்து கணிசமான அளவு நீர் பயன்படுத்தப்படாமல் பாகிஸ்தானுக்குள் செல்ல இந்தியா அனுமதித்தது.
இன்று, ராவி ஆற்றின் குறுக்கே ஷாபூர் கண்டி தடுப்பணைக் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளதையடுத்து, பாகிஸ்தானுக்கு உபரி நீர் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் நீர் மேலாண்மை தொடர்பான நடவடிக்கைகளில் உத்திசார் ரீதியான மாற்றத்தையும் காணமுடிகிறது.

தேசிய பாதுகாப்புக்கு பயங்கரவாத நடவடிக்கைகள் அச்சுறுத்தலாக இருந்த போது அதற்கு எதிரான இந்தியாவின் உறுதியான ராஜதந்திர நடவடிக்கைகளை குறிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் தனது உரிமைகளை வலியுறுத்தும் அதே வேளையில், ஒரு இராஜதந்திர நடவடிக்கையாக இந்தியா இதனைப் பயன்படுத்தும் முறையை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் விவசாயப் பணிகளுக்கு பயனளிக்கும் வகையில், 4000 ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யும் திறன் கொண்டது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு குறித்த இந்தியா-சீனா இடையேயான ஒப்பந்தம்

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், 2014-ஆண்டுக்குப் பிறகு, எல்லைப் பகுதிகளில் வலுவான ராணுவ நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் இந்தியா கவனம் செலுத்தியது. 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா - சீனா துருப்புகளுக்கு இடையே நடைபெற்ற மோதல் இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்தது. இதன் காரமணாக எல்லைப்பகுதிகளில் இந்திய துருப்புக்களை நிலைநிறுத்தவும், உள்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக மேற்கொள்ளவும் இந்தியாவைத் தூண்டியது. இந்த ஆண்டு கடந்த நான்கு ஆண்டு காலமாக இருநாட்டு துருப்புகளுக்கு இடையே நிலவி வந்த பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்தியா - சீனா நாடுகளிடையே எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டில் (எல்ஏசி) டெப்சாங் சமவெளி, டெம்சோக் பகுதிகளில் ரோந்துப் பணியை மீண்டும் தொடங்க ஏதுவாக ஒரு உடன்பாட்டை எட்டின. இது 2020-ம் ஆண்டு மே மாதத்தில் ஏற்றபட்ட பதற்றங்களுக்கு முன்பு இருந்த நிலையை மீட்டெடுத்தது. இந்த ஒப்பந்தம், இந்திய-சீன நாடுகளிடையே உள்ள எல்லைப் பகுதிகளில், குறிப்பாக போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த டெப்சாங் சமவெளிப் பகுதிகளில், படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதிலும், ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ள வழிவகுத்தது.

உக்ரைன் போரில் அமைதி நிலவ இந்தியா விருப்பம்

ஐநா சபையில் நடைபெற்ற விவாதத்தின் போது 'இது போருக்கான நேரம் அல்ல' என்ற இந்தியாவின் நிலைப்பாடு உலக நாடுகளிடையே வலுவாக எதிரொலித்துள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரில் சமாதான தூதுவராக செயல்படும் நிலையில் இந்தியா உள்ளது. .

உக்ரைன் போரில் இந்தியா மத்தியஸ்த்தம் செய்யும் நாடாக இருக்க முடியும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார் . ரஷ்யா - உக்ரைன் இடையே
நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்காற்ற முடியும் என்று போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்தார். உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண்பதில் இந்தியா சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும் என்று இத்தாலி பிரதமர் மெலோனி தெரிவித்தார்.

2024-ம் ஆண்டின் மையப்பகுதியில், பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் அவசியம் குறித்து அதிபர் விளாடிமிர் புடினுடன் நேரடியாக தெரிவித்தார். அதன் பிறகு உக்ரைன் நாட்டுக்குச் சென்ற அவர், அங்கு அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா முக்கியப் பங்காற்ற தயாராக இருப்பதாக எடுத்துரைத்தார்.

இந்தியா ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நாடாகும். ஏனெனில், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் மோதலுக்கான காரணிகளை பகுத்தாய்வு செய்து அமைதியை நிலைநாட்ட முயல்கிறது. ஐ.நா. பாதுகாப்புக் குழுமத்தின் முன்னாள் தலைவர் கிஷோர் மஹ்புபானி, சில தலைவர்கள் மட்டுமே இத்தகைய சிக்கலான சூழலில் உறுதியான முடிவுகளை மேற்கொள்வதன் மூலம் சூழ்நிலையில் திறம்பட வழிநடத்த முடியும் என்று குறிப்பிட்டார். ஒரு மாபெரும் புவிசார் அரசியலில் தேர்ந்த தலைவராக இருப்பதன் மூலம் இந்தியாவின் மீதான நம்பிக்கையை உயர்த்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

உலகில் உள்ள தென்பகுதி நாடுகளின் குரலாக இருக்கும் வகையில், உச்சி மாநாட்டை இந்தியா நடத்தியது. 2024-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி புதிய அரசு அமைந்ததிலிருந்து பிரதமர் நடத்திய முதல் பன்முக உச்சி மாநாடு இதுவாகும்.

2024-ம் ஆண்டில் பிரதமர் மோடி மேற்கொண்ட கயானா, நைஜீரிய பயணங்கள், கரீபியன் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் அமைந்தன.

2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே பிரதமர் மோடி, ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டார். மேலும் அவர் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு பிரதமர் மோடி கலந்து கொண்ட முதல் சர்வதேச உச்சிமாநாடு இதுவாகும். இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மையையும் பிரதமர் மோடியின் பிரபலத்தையும் குறிக்கும் வகையில் மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் ஒரு சில உலக நாடுகளின் தலைவர்களில் ஒருவராக மோடி அங்கீகரிக்கப்படுகிறார். இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடைபெற்ற 50-வது ஜி-7 உச்சி மாநாட்டில் இந்தியா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றது. பிரதமர் மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தில் முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைந்தது.

மியான்மர் நாட்டுடனான தடையற்ற போக்குவரத்திற்கு முற்றுப்புள்ளி

நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், மியான்மர் நாட்டின் எல்லையை ஒட்டிய இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் மக்கள்தொகை கட்டமைப்பைப் பராமரிக்கவும் இந்தியா-மியான்மர் நாடுகளிடையே தடையற்ற போக்குவரத்துகளை ரத்து செய்ய இந்தியா முடிவு செய்தது.

ஆபரேஷன் இந்திராவதி

ஹைட்டி தீவிலிருந்து டொமினிகன் குடியரசுக்கு தனது குடிமக்களை வெளியேற்றுதற்காக இந்தியா ஆபரேஷன் இந்திராவதி என்ற நடவடிக்கையைத் தொடங்கியது.

ஆபரேஷன் சத்பவ்

லாவோஸ், மியான்மர், வியட்நாம் நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகள், பேரழிவு நிவாரணம் வழங்கும் வகையில் ஆபரேஷன் சத்பாவை இந்தியா தொடங்கியது

2024-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி, சிரியாவிலிருந்து 75 பேரை இந்தியா வெற்றிகரமாக வெளியேற்றியது.

இந்தியா - மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான வழித்தடத்தை அமைக்கும் நடவடிக்கைகள் வலுப்பெறுகிறது

2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளிடையே இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா நாடுகள் வழியான வழித்தடத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் முதல் முறையாக கையெழுத்திட்டன. அதே மாதத்தில் கிரீஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி, அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது, அந்நாட்டுப் பிரதமர் KyriakosMitsotakis பேசினார். காசா, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் இருந்த போதிலும் இந்தியா - மத்திய கிழக்கு நாடுகள் - ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் வழித்தடத்தை அமைக்கும் பின்னணியில் உள்ள நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிட முடியாது என்று கூறினார். இந்த வழித்தடத்தை அமைப்பதற்கான உறுதிப்பாட்டை இத்தகைய பதற்றங்கள் பலவீனப்படுத்திவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சபஹார் துறைமுகத்தை மேம்படுத்துவதில் இந்தியாவின் பங்கு

சபஹார் துறைமுகத்தின் மேம்பாடு அந்தப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கிற்கு எதிரான ஒரு உத்திசார் நடவடிக்கையாக கருதப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கவலைக்குரியதாக உள்ளது. 2024-ம் ஆண்டு மே 13-ம் தேதி, இந்தியா போர்ட்ஸ் குளோபல் நிறுவனம் ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்புடன் சபாஹர் துறைமுகத்தில் உள்ள ஷாஹித் பெஹெஷ்டி முனையத்தின் மேம்பாடு மற்றும் செயல்பாட்டிற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஈரான், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிக்கும் அதே வேளையில் பாகிஸ்தானைத் தவிர்த்து, ஒரு வெளிநாட்டு துறைமுகத்தின் முழு அளவிலான நிர்வாகத்தை இந்தியா நிர்வகிப்பது இதுவே முதல் முறையாகும்.

சபாஹர் துறைமுகத்தில் ஷாஹித் பெஹெஷ்டி துறைமுக முனையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஈரானுடன் இந்தியா 10 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. .

இந்தியா-மாலத்தீவு உறவுகளின் மறுசீரமைப்பு

2023 நவம்பர் மாதத்தில் மாலத் தீவு அதிபராக திரு முகமது முயிஸு வெற்றி பெற்ற பின்னர் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் சற்று விரிசல் ஏற்பட்டது. பிரதமரின் லட்சத்தீவு பயணத்திற்கு எதிர்வினையாற்றும் வகையில், மாலத்தீவு முற்போக்குக் கட்சியைச் சேர்ந்த ஜாஹித் ரமீஸ் உட்பட அந்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் இந்தியாவின் உறுதியான, ஸ்த்ரமான ராஜதந்திர நடவடிக்கைகள் அத்தகைய நிலையை மாற்றியது. 2024-ம் ஆண்டு அக்டோபர் 6 முதல் 10-ம் தேதி வரை அந்நாட்டு அதிபர் முய்ஸு இந்தியாவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது இந்த திருப்புமுனை ஏற்பட்டது. இந்தியாவின் மாண்பைக் குறைக்கும் நடவடிக்கைகளில் மாலத்தீவு ஈடுபடாது என்று அந்நாட்டு அதிபர் திரு முய்ஸு, இந்தியாவுக்கு உறுதியளித்தார்.

அமெரிக்காவின் வில்மிங்டன் நகரில் நடைபெற்ற குவாட் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கால் முன்வைக்கப்படும் சவால்களுக்கு எதிராக இந்தியாவின் வளர்ந்து வரும் பங்களிப்பையும், அதன் உத்திசார் நிலைப்பாட்டையும் இது பிரதிபலிக்கிறது

அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டின் போது, தூய்மையான, நியாயமான பொருளாதாரம், வளமைக்கான இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் கீழ், பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது.

புதிய செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலிகள் அவசர கால ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் குறைமின்கடத்தி விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துவது குறித்து இந்த அமைப்பின் தலைவர்கள் விவாதித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+