3-ல் 1 பங்கு நிராகரிப்பு.. EPF தொகையை எடுக்க முடியாமல் நாடு முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் பரிதவிப்பு
டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து இறுதி தொகையை பெறுவதற்கான விண்ணப்பங்களில் 3ல் ஒரு பங்கு நிராகரிப்புக்கு உள்ளாவதால், வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் உள்ள தொகையை ஓய்வு காலத்தில் எடுக்க முடியாமல் லட்சக்கணக்கானவர்கள் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தொழிலாளர் வருங்கால வைப்பு (EPF) என்பது இந்தியாவில், தொழிலாளர்களுக்கான மிக முக்கிய ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகப் பார்க்கப்படுகிறது. தொழிலாளர் வைப்பு நிதிக்கு ஊழியர் பணிபுரியும் நிறுவனமும், ஊழியரும் சமமான அளவில் தொகையை வழங்க வேண்டும்.

பணியாளர் ஓய்வு பெற்ற பிறகு இந்த சேமிப்பு பணம் ஊழியரது கணக்கில் வரவு வைக்கப்படும். ஓய்வு வரும் காலத்தில் ஊழியருக்கு குறிப்பிட்ட அளவிலான நிதி பாதுகாப்பை ஊழியருக்கு வருங்கால வைப்பு நிதி அளிக்கிறது. வருங்கால வைப்பு நிதியின் முக்கிய நோக்கம் என்னவென்றால், ஊழியர்களுக்கு நிதி அளவில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே ஆகும்.
3 இல் ஒருவருக்கு நிராகரிக்கப்படுகிறது: இருந்தாலும் ஊழியர்களுக்கு சில காரணங்களை காட்டி இந்த வருங்கால வைப்பு நிதியில் குறிப்பிட்ட அளவு பணத்தை முன்கூட்டியே எடுத்துக் கொள்ளலாம். பணியில் இருக்கும் வரை, வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) கணக்கிலிருந்து முழுமையாக எந்தப் பணத்தையும் எடுக்க முடியாது. அதாவது, பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் 3 மாத அடிப்படை சம்பளத்துக்கு சமமான பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
அல்லது பி.எஃப் கணக்கில் நிகர இருப்பு நிதியில் 75 % சமமான பணத்தை திரும்பப் பெறலாம். இதில் எது குறைந்த தொகையோ அது கணக்கில் வரவு வைக்கப்படும். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம். இபிஎப் எனும் வருங்கால வைப்பு நிதியில் இருந்து இறுதி தொகையை பெறுவதில் பயனாளர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து இறுதி தொகையை பெறுவதற்கான விண்ணப்பங்களில் 3-ல் 1 பங்கு நிராகரிப்புக்கு உள்ளாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் முறையிலான நடைமுறைகளே காரணம்: 2022-23 நிதி ஆண்டில் 73.87 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 24.93 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பணியாற்றியதன் மூலம் சேமித்த தொகையினை பெற முடியாமல் லட்சக்கணக்கானவர்கள் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். 2017-18-ல் 12.9 சதவிகிதமாக இருந்த நிராகரிப்பு விகிதம் 2022-23 ஆம் ஆண்டில் 34 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அதவது இறுதி செட்டில்மெண்ட் தொகையை விண்ணப்பிக்கும் 3-ல் ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. இது குறித்து EPFO அதிகரிகள் கூறுகையில், வருங்கால வைப்பு நிதியின் இறுதி செட்டில்மெண்ட் தொகை நிராகரிக்கப்படுவதற்கு ஆன்லைன் முறையிலான நடைமுறைகளே முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு முன்பாக ஆவணங்கள் சரிபார்ப்பு ஆகியவை ஊழியர்கள் வேலை செய்யும் நிறுவனங்களே மேற்கொள்ளும்.
மன உளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள்: இறுதியாக இபிஎப்ஓ அலுவலகத்திற்கு வரும். ஆனால் தற்போது 99 சதவிகிதம் ஆதார் சான்று மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. இதனால், ஆவணங்களில் உள்ள சிறு சிறு வேறுபாடுகள் கூட நிராகரிப்புக்கு காரணமாக அமைந்து விடுவதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
கஷ்டப்பட்டு சேர்த்த வருங்கால வைப்பு நிதியை எடுக்க நினைக்கும் போது அது நிராகரிப்பு ஆவதால், கடும் மன உளைச்சலுக்கு தொழிலாளர்கள் ஆகிறார்கள். எனவே, வருங்கால வைப்பு நிதி பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை களைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications